Skip to main content

“வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” -  ஒடிசா விபத்து குறித்து  திருமாவளவன்

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Thirumavalavan on the Odisha train accident

 

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடந்த நிகழ்வு அரசியல் என்று நாம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்லவில்லை.  ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக உள்ளது என தொழில்நுட்ப வல்லுநர்களே கருத்து சொல்கிறார்கள். காவச் என்கிற பாதுகாப்பு கருவி முறையாக பயன்படுத்தி இருந்தால் இது தவிர்க்கப்பட்டு இருக்கும் என்கிற கருத்தும் சொல்லப்படுகிறது. 

 

இவற்றை எல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வெறுப்பு அரசியலை செய்வதற்குத்தான் அவர்களுக்கு நேரமுள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்புவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் உள்ளது. மக்களது பாதுகாப்பில் கவனம் செலுத்த இவர்களுக்கு நேரம் இல்லை என்பதை எப்படி சுட்டிக் காட்டாமல் இருக்க முடியும். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நிகழ்வுகளுக்காக ஏற்பாடுகள் செய்திருந்த அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு துக்க நாளாக அதை கடைப்பிடிக்கும் படி அறிவித்தார். அதுமட்டுமின்றி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து ஒடிசா மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதலையும் தந்துள்ளார். நமது  முதல்வரின் நடவடிக்கைகள் ஆறுதலாக இருக்கிறது, அவருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும்,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.  பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.  இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து  வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது.  அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.

பாஜக அரசை  எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது.  இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன்,  காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

“இட ஒதுக்கீடு பிடிக்காத கட்சி பாஜக” - திருமாவளவன் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
BJP is a party that does not like reservation says Thirumavalavan

சிதம்பரம்  நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இவர் திங்கள்கிழமை சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்படை, கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பூண்டி குமாரமங்கலம், பிச்சாவரம்,டி.எஸ். பேட்டை, கனகாரப்பட்டு, உத்தமசோழமங்கலம், கொடிபள்ளம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், பெரிய மதகு, மடுவாங்கரை, நஞ்சமகத்துவாழ்க்கை, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணிக்கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் வியூகம் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். சனாதன சக்திகள் உங்களிடம் வந்து பசப்பு வார்த்தைகள் கூறி பேசுவார்கள் நம்ப வேண்டாம்.  தேசிய அளவில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  இட ஒதுக்கீட்டை விரும்பாத கட்சி பாஜக. அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்காது.

அனைத்தையும் அழித்து விடும். ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறிய விபி சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக தான். எனவே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கும் மக்கள் நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் ஏழை மக்களுக்கு கிடைக்க தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். இங்கு பானை சின்னத்திற்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இவருடன் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கலையரசன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திமுக கொத்தங்குடி கிளை செயலாளர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.