Thirumavalavan explained DMK did not give us any crisis

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

Advertisment

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மனு அளித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் வி.சி.க கட்சி சார்பில் போட்டியிட உள்ளோம். ஆகவே, வி.சி.க கட்சிக்கு பானை சின்னத்தை சுயேட்சை சின்னத்தில் இருந்து பொது சின்னமாக முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் இருப்பது போல் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டோம். அப்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி திமுக நெருக்கடி எதுவும் தரவில்லை. திமுக அதுபோன்ற கருத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வைத்தது உண்மை. அப்போது வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டதே தவிர, வி.சி.க கட்சியை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது செய்யப்படவில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொது தொகுதி ஒன்றை ஒதுக்கும்படி தி.மு.கவிடம் கேட்டுள்ளோம்” என்று கூறினார்.

Advertisment