Skip to main content

“உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...” - ஐடி ரெய்டு குறித்து தங்கமணி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Thangamani has commented it raid conducted at Minister Senthil Balaji house

 

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணம், சட்ட ஒழுங்கு பிரச்சனை என திமுக அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி, “இந்த அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான அதிருப்தி இருக்கிறது என்று இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தால் தெரியும். பொதுவாக நாங்கள் சொன்னால் எதிர்க்கட்சி என்று சொல்வார்கள். ஆனால் நிதியமைச்சராக இருந்த பிடிஆரே திமுக அரசு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் கூட அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போதும் பதிலில்லை. டாஸ்மாக்கை பற்றி அவரது கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். அவர்களையும் திமுக அரசே கைது செய்திருக்கிறது.

 

முன்பு தமிழகத்தில் அனுமதியில்லாமல் எந்த பாரும் இயக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஆனால் சமீபத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கிற்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாண்டு காலமாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க வேண்டும் என்று என்று வலியுறுத்தி வருகிறோம். வருமான வரிசோதனையின் போது அதிகாரிகள் திருடர்களைப் போல் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்தார்கள் என்று அமைச்சர் கூறினார். என்னுடைய வீட்டிலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலும் கூடத்தான் வருமான வரித்துறை சோதனைக்கு வந்தபோது அதிகாரிகள் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்து சோதனை நடத்தினார்கள்.

 

அன்றைய தினம் அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து செய்தியாக ஒளிபரப்பினார்கள். அதெல்லாம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டில் நடந்தால் மட்டும்தான் வாய் திறக்கிறார்கள். அவர்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற அடிப்படையில் திமுக அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மடியில் கணம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எதற்காகத் தொண்டர்களை வைத்து அதிகாரிகளை மிரட்ட வேண்டும். எங்களது ஆட்சியின் போதுதான் எங்கள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் முழு பாதுகாப்பு கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லை. அதிகாரிகளே காவல் நிலையத்தில் சென்று பாதுகாப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

 

கரூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் முதல்வர் இல்லை. செந்தில் பாலாஜிதான் முதல்வர். அவர் சொல்வதைத்தான் காவல் கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள் என அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் கேட்பார்கள். அந்த அளவிற்கு அமைச்சர் வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.