Skip to main content

போலீசின் அலட்சியம்! -செய்தியாளர் படுகொலை சம்பவத்திற்கு வேல்முருகன் கண்டனம்! 

Published on 10/11/2020 | Edited on 10/11/2020
tvk

 

 

தனக்கிருந்த கொலை மிரட்டலை போலீசில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கொலையாளிகளை கொலைக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ் சிறைப்படுத்துவதோடு, மோசஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்தவர் மோசஸ். இவர் இந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோத, சட்ட விரோத சம்பவங்களை அம்பலப்படுத்தி செய்தியளித்து வந்தார். இதனால் இவருக்கு தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் வந்துகொண்டிருந்தது.

 

கொலை மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை மோசஸ் போலீசிலும் புகார் செய்திருந்தார். ஆனால் போலீசின் அலட்சியம் கடைசியில் மோசஸின் கொலையில் போய் முடிந்துள்ளது.

 

திருவள்ளூர் பகுதியில் கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருப்பதை மோசஸ் கண்டுபிடித்துள்ளார். அதனைச் செய்தியாக அளித்து அம்பலப்படுத்தியுள்ளார் மோசஸ். அதன் காரணமாக சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகள் மோசஸ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

 

இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை எடுத்து சொல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் மோசஸ். ஆனால் அந்தப் புகார் தூங்கிக் கொண்டிருந்ததே தவிர, அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அறிந்துதான் அந்த சட்ட விரோத, சமூக விரோத குற்றவாளிகளுக்கு துணிச்சல் வந்திருக்க வேண்டும்; மோசஸைப் படுகொலை செய்து விட்டிருக்கின்றனர்.

 

முன்கூட்டிப் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்த சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

எனவே தமிழக அரசு இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதில் உடந்தையாக செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

 

மேலும், ஊடக துறையினர் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகியிருப்பதையும் மோசஸின் படுகொலை சுட்டிக் காட்டுகிறது. இது மிக மிக ஆபத்தான சூழ்நிலையாகும்.

 

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, கொலையாளிகள் கொலைக் குற்றத் தண்டனை பெறுவதினின்றும் தப்பிவிடாதபடி நடவடிக்கை எடுத்து உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது மட்டுமல்ல; பேராபத்தினையும் விளைவிக்கக் கூடியது. எனவே இந்தப் பயங்கரமான நிலையைப் போக்கும்படித் தக்க சட்ட நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனக்கிருந்த கொலை மிரட்டலை போலீசில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை! கொலையாளிகளை கொலைக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ் சிறைப்படுத்துவதோடு, மோசஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி'' இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.