Skip to main content

உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்... 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

tasmac employees Protest

 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது. அந்தத் தளர்வின்போது டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளில் சில வழிமுறைகளுடன் விற்பனை நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

 

இந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடதரம் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

 

டாஸ்மார்க் கடைகளில் ஊழியர்களுக்கு சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் முதலில் வழங்கப்பட்டதாகவும், கடைகளில் மது வாங்க வருபவர்களுக்கு தடுப்பு ஏற்படுத்தி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள், பின்னர் அந்த பாதுகாப்பு கைவிடப்பட்டன என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இப்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுத்தொகைகளை டாஸ்மார்க் நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை, கரோனா நோயினால் 2 ஊழியர்கள் அடுத்தடுத்து பலியான நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். 


இந்த நிலையில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 226 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மண்டல மேலாளர் முருகன் டாஸ்மார்க் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது டாஸ்மாக் பணியாளர்கள் எங்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 50 லட்சம் நிவாரணம் அவர்களின் வாரிசுகளுக்குத் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான மருத்துவச் செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 

இதைத் தொடர்ந்து உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊழியர்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதாக மாவட்ட மேலாளர் முருகன் கூறியதையடுத்து ஊழியர்கள் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க கோபாலகிருஷ்ணன் பிரபாகரன் ஜெய்கணேஷ் விஜி தொ.மு.சவைச் சேர்ந்த காமராஜ் உட்பட பல ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். 

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.