Skip to main content

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவரக்கோரி போராட்டம்! வேல்முருகன் அறிவிப்பு

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
t. velmurugan tvk

 

 

வெளிநாடு வாழ் தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர வலியுறுத்தி நாளை (05.07.2020) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது இல்லங்களில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை நடத்துவார்கள் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது தமிழ்ச் சொலவடை. அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது சின்னஞ்சிறு நாடான கியூபா. அமெரிக்கா போன்ற உலகின் மாபெரும் நாடுகளே கரோனாவை எதிர்கொள்வதில் மண்ணையே கவ்விய நிலையில், கரோனாவைக் கட்டுக்குள் வைப்பதில் வெற்றி பெற்ற உலகின் முதல் நாடாகத் திகழ்கிறது கியூபா.

அத்துடன், கரோனாவை எதிர்கொள்ள தன்னிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, 1200 மருத்துவர்களை அனுப்பி வைத்துள்ளது கியூபா. தனக்கு நெருக்கமான தென்னாப்ரிக்காவுக்கு மட்டும் 200 மருத்துவர்களை அனுப்பியுள்ளது.

அந்த நெருக்கம், ஆங்கில ஆட்சிக்கு எதிரான தென்னாப்ரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்தே ஏற்பட்டதாகும். அப்போது தென்னாப்ரிக்க மக்கள் தலைவர் நெல்சன் மண்டேலாவை ஆதரித்து நின்றது கியூபா.

நெல்சன் மண்டேலா, இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” வழங்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார். விருதை வழங்கியவர் நமது சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். இதையெல்லாம் சொல்வது ஏனென்றால், இந்தக் கரோனா காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் துன்பப்படக் காரணம் அவர்கள் சென்ற நாடுகள் கியூபா போன்றதில்லை. இங்கு நம் நாட்டிலும் தமிழர்களை நேசித்த வி.பி.சிங் போன்றோர் அதிகாரத்தில் இல்லை. வி.பி.சிங், ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்ட இந்திய அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொண்டவரும் ஆவார்.

கியூபாவின் இந்த கைமாறு கருதா கடமைப்பாட்டிற்குக் காரணம், அங்கு பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடைபெறுவதுதான். கியூபாவைப் போல் பொதுவுடமைக் கட்சி ஆட்சி நடக்கும் சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரளமும் கரோனாவைக் கட்டுப்படுத்தி, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கரோனாவால் வெளிநாடுகளில் தவித்த மலையாளிகளையும் தன்னிடம் அழைத்துக் கொண்டுள்ளது, அதற்கு மிகவும் உதவியாக இருந்தது, கேரளாவில் உள்ள வெளிநாடு வாழ் மலையாளிகள் நலத் துறையேயாகும். 25க்கும் மேற்பட்ட விமானங்களை ஒன்றிய அரசிடம் பெற்று அத்தனை மலையாளிகளையும் அழைத்துவந்துவிட்டது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு.

ஆனால் வெளிநாடு வாழ் தமிழர்கள் நிலையோ பரிதாபம். கரோனாவால் அவர்கலில் பலரும் வேலை இழந்து, உணவும் உறைவிடமும் இன்றி தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே அல்லலுறுகிறார்கள் என்றால், அவர்களின் குடும்பத்தினர் இங்கே அவதிப்படுகிறார்கள்.

அவர்களைத் தாயகம் அழைத்துவர அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இதன் மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, “விமானம் தரையிறங்கத் தமிழ்நாடு அனுமதி அளிக்கவில்லை” என ஜூன் 30இல் பதிலளித்தது ஒன்றிய அரசு.

அதேசமயம், 10 மடங்கு கூடுதல் கட்டணமும், தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் கட்டணமும் கொண்ட சார்ட்டர்டு விமானங்களை மட்டுமே தமிழகத்தில் தரையிறங்க அனுமதிக்கிறது அதிமுக அரசு.

பெரும்பாலும் தமிழர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் உள்ளனர். இவர்கள் தமிழகம் திரும்ப, ஒன்றிய அரசு ஏன் விமானங்களைத் தரவில்லை என்பதற்கான பதிலையும் இதுவரை தமிழக மக்களிடம் தெரிவிக்கவில்லை அதிமுக அரசு. இது சரியல்ல, ஓர் அரசுக்கு இது அழகுமல்ல. ஆனால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்டாக வேண்டும். அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

 

கரோனா நெருக்கடியால் வெளிநாடுகளில் வேலை செய்துவந்த தமிழர்களும் தவிக்கும் நிலை!

அவர்களைத் தாயகம் அழைத்துவர, தமிழர்க்கென நாடு இல்லாதது அதைவிடவும் பெரிய குறை!

 

இதை உணர்ந்து, ஒன்றிய அரசை உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுடன், தமிழக அரசை வெளிநாடு வாழ் தமிழர்நல அமைச்சகத்தை அமைக்கவும் , வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கக்கோரியும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மேற்கண்ட வெளிநாடு வாழ் தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர  வலியுறுத்தி நாளை (05.07.2020) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சமூக இடைவெளியை பின் பற்றி தங்களது இல்லங்களில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.