Skip to main content

வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

mk stalin

 

வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகை அச்சுறுத்தும் கரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பில் உள்ளனர். பலருக்கு வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாயகம் திரும்ப விரும்பி, இந்தியத் தூதரகங்களிடம் முறையிட்டனர். இதனையடுத்து, 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

 

அண்டை மாநிலமான கேரளா, தனது மாநிலத்தைச் சேர்ந்தோர் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டு சிறப்பாக அதனை நிறைவேற்றியுள்ளது. பயணம், பாதுகாப்பு, பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேசத் தரத்தில் கேரள அரசு மேற்கொண்டதை மத்திய அமைச்சகமும் பாராட்டியுள்ளது.

 

அதேநேரத்தில், வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களைத் திரும்ப அழைப்பதற்கான முயற்சிகளில் மாநிலத்தை ஆளும் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை என்பதை அங்குள்ள தமிழர்கள் காணொலி - மின்னஞ்சல் - சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இதுகுறித்து வெளிநாடுவாழ் தமிழர்களுடன் காணொலி வாயிலான சந்திப்பில் நானும் கேட்டறிந்து, கேரள அரசைப் போல ஒரு இணையத்தளத்தை உருவாக்கி, பதிவு செய்திட வலியுறுத்தினேன்.


அதன்பிறகே, nonresidenttamil.org என்ற இணையத்தளத்தைப் பெயரளவுக்கே தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அதனையும் முறையாகச் செயல்படுத்தவில்லை.

 

'வந்தே பாரத்' திட்டத்திலும் தமிழகத்திற்கு போதுமான விமானச் சேவைகள் நடைபெறவில்லை. இதுகுறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அயல்நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்களை அழைத்துவர வேண்டும் எனக் கோரப்பட்டது.


இதன் மீதான விசாரணையில் பதில் அளித்துள்ள மத்திய அரசு, தமிழகத்தில் விமானம் தரையிறங்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என ஜூன் 30 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஜூலை 2 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தி.மு.கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களின் வாயிலாக, 10 மடங்கு அதிக கட்டணமும் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் கட்டணமும் உள்ளடக்கிய சார்ட்டர்டு விமானங்களில் வரும் பயணிகளை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்கிறது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.


அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் ஒருவேளை உணவோ அல்லது அதற்கும் வழியின்றியோ வீதிகளில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மத்திய அரசின் அறிக்கையின்படியே, 27ஆயிரத்து 956 தமிழர்கள் வெளிநாட்டில் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை மீட்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.


கழக மூத்த வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான சாதகமான திட்டத்துடன், வரும் திங்களன்று பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


வெளிநாடுகளில் வேலை பார்ப்போரும் தமிழர்கள்தான்! பேரிடர் சூழலில் வேலையும் பாதிக்கப்பட்டு அவர்கள் பரிதவிப்பதால், அவர்களின் குடும்பத்தார் இங்கே பரிதவிக்கிறார்கள். இருதரப்பின் நிலையையும் உணர்வையும் புரிந்து கொள்ளக்கூடிய சூழலில் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் இல்லையோ எனச் சந்தேகம் எழுகிறது.

 

வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான விமானச் சேவைகளை இயக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய அ.தி.மு.க. அரசு, கிடைக்கின்ற வாய்ப்புகளையும் தவிர்ப்பது சரியான அணுகுமுறையல்ல!

 

http://onelink.to/nknapp


மிகக்குறைந்த அளவே தமிழகத்திற்கு விமானச் சேவை இயக்கப்படுகிற நிலையில், அதில் தாயகம் திரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்களிடம் கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக அதிக தொகை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்நியச் செலாவணி ஈட்டித்தந்த அவர்கள் இப்போது நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்பும்போது, அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும். இனியும் இதுபோன்று அலட்சியம் காட்டாமல், வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


வெளிநாடுகளில் வாழும் மலையாளம் பேசும் மக்களுக்காக கேரள மாநில அரசு ஒரு தனித்துறையை உருவாக்கி, அவர்களின் நலன் காப்பதில் முன்னணியில் இருக்கிறது. தி.மு.கழகம் கடந்த தேர்தல் அறிக்கையிலேயே வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது. ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் தி.மு.கழக அரசு அமையும்போது அத்தகைய துறை உருவாக்கப்பட்டு, அயலகத் தமிழர் நலன் முழுமையாகக் காக்கப்படும். 


உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான செயல்பாடுகளை எப்போதும் கழகம் மேற்கொண்டு, அவர்களுக்கு எந்நாளும் துணை நிற்கும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.