Skip to main content

பணம் எப்போ வரும்? ரேஷன் கார்டுக்கு ரூபாய் 1000... யாருக்கு எப்போது கிடைக்கும்?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

21 நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தால் ஏழை-எளிய அன்றாட உழைப்பாளிகளின் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளக்காரர்களின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் 'இந்தத் தொகை எப்படி வழங்கப்படும்?' என்கிற கேள்வி எழுந்தது.

முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, சமூக வலைதளங்களில் ரேசன் கடைகளில் கூட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்வது போன்று படங்கள் வெளியாக, பொதுமக்கள் உடனே ரேசன் கடைகளுக்கு சென்று, 'பணம் எப்போ வரும்? பணம் எப்போ வரும்?' என்று கேட்க ஆரம்பித்தனர். இதுக்காகவே கூட்டம் திரள்வதால் பலரிடையே அச்சமும் நிலவியுள்ளது. ''ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகுதான் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்'' என்று பல ரேசன் கடைகளில் சொல்லி வந்தார்கள். ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று சில இடங்களில் சொல்லி வந்தார்கள்.

 

ration shop



இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "கரோனா வைரஸினால் பொதுமக்கள் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் கொடுத்து பொருளும் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

மார்ச் மாத பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால், பணம் கொடுத்து தற்போது வாங்கிக்கொள்ளலாம்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் அல்லது செயலியில் வாங்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம்.

அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு நிதியுதவியை முறையாக விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்கள்.



இந்நிலையில், கூட்டுறவுத்துறை 26.3.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரேசன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் அறிவிப்பு ஆறுதலைத் தருகிறது. அவர் கூறியுள்ள தகவலில், ''ஒவ்வொரு நியாயவிலைக் கடை ஊழியர் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தினை தருவார்கள். அதனை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டதும் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

அதேபோல் நியாய விலைக்கடையில் அனைவருக்கும் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கலாம், கூட்டமாக இருக்கும்போது கடைக்கு செல்லாமல் இருக்கலாம். அரசு பின்பற்றக் கூறிய இடைவெளியில் நிற்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆயிரம் ரூபாய் போதாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு நிவாரணமாக பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த, அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார். 31ஆம் தேதி வரையிலான வேலை நிறுத்தத்துக்கே, ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்று வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த எளிய மக்கள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கையில், 21 நாட்கள் வேலையில்லாமல் முடங்கிக்கிடந்தால் அதுக்கு ஆயிரம் ரூபாய் எல்லாம் எம்மாத்திரம்? இதில் உள்ள சிக்கலை அரசு உணர வேண்டும். ஊரடங்கினால் எளிய மக்களின் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நிதியுதவியை உயர்த்தி தர வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில், முதல் கட்டமாக 1000 ரூபாயை ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நூறு, நூறு பேருக்காகத் தரும்போது, பாதிப்படைந்தவர்களில் ஒரு சிலருக்கு முன்கூட்டியும், ஒருசிலருக்கு கடைசியாகவும் கிடைக்கக் கூடிய நிலை உள்ளது.

ஏப்ரல் 2ல் தொடங்கி 15 வரையிலான பண விநியோகத்தில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் என்பது தெரியாத நிலையில், மக்கள் பொறுத்திருந்து தங்களுக்கான தொகையைப் பெறவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதற்கிடையே, கேஸ் மானியத்தை விட்டுக்கொடுப்பவர்கள் தாங்களாக முன்வந்து அறிவிக்கச் சொன்ன மத்திய அரசு போல, மாநில அரசும் தற்போதைய நிதி நெருக்கடி நிலையில், ரேஷன் கார்டுக்கான 1000 ரூபாயை விட்டுக் கொடுக்க நினைப்பவர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.