Skip to main content

"ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது" - உச்சநீதிமன்றம்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

supreme court talks about maharashtra state governor action

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால், கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. மேலும் சிவசேனாவானது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.

 

இது தொடர்பாக இருதரப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. அமர்வானது இந்த வழக்கு பற்றி குறிப்பிடுகையில், "ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதே நேரம் ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது. ஆளுநர்கள் இவ்வாறு அரசியலில் ஈடுபடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துவிடும். சிவசேனாவில் உட்கட்சிப் பிரச்சனை எழுந்தபோது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவசரம் காட்டினார். உட்கட்சிப் பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா? இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும்" எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில் தான் நீதிபதிகளின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தன்னால் வெற்றி பெற முடியாது எனக் கருதி உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து எப்படி அவரை பதவியில் அமர்த்த முடியும். ஒருவேளை அவர் சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தால் கூட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வது பற்றி நாங்கள் முடிவு எடுத்து இருக்க முடியும்" என்றனர்.

 

மகாராஷ்டிரா மாநில அரசியல் நெருக்கடி மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; சிக்கலில் நயினார் நாகேந்திரன் - வெளியான அதிர்ச்சி வீடியோ

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. அதே வேளையில், அந்த பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் பாஜகவினர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், நயினார் நாகேந்திரன், 'எனக்கும் அதற்கு சம்பந்தமில்லை' என கூறி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் போலீசார், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதிலும், எஃப் ஐ ஆர்-ல் சொல்லப்பட்ட பல முக்கிய தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் பாலாமணி என்பவர் தேர்தல் பறக்கும் படையில் உள்ளார். அவரது டீம்மில் காவலர்கள் பிரபாகரன், குணசீலன், வீடியோ கிராபர் மோகன்ராஜ், டிரைவர் டில்லிபாபு ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று செந்தில் பாலாமணி தேர்தல் பறக்கும் படை டீம் தாம்பரம் செக்போஸ்ட் அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்தில் பாலாமணியை போனில் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏ கோச் படுக்கை எண்கள் 26,27,28 ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பணம் கொண்டுச் செல்வதாக தகவல் அளித்துள்ளார். தகவலின் படி, செந்தில் டீம்  தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்துள்ளனர்.

தகவலின் படி ரயிலில் பயணம் செய்த சதீஷ், பெருமாள், நவீன் என்ற மூவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அதிக அளவு பணம் இருந்தது தெரிய வந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால்  தேர்தல் பறக்கும் படை கையும் களவுமாக அவர்களை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். அதில், 3,98,91,500  ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து சிக்கிய சதீஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை, திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தன்னிடம் கொடுத்து அனுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெருமாள் என்பவரிடம் விசாரணை செய்ததில் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பணம் அனைத்தையும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுத்ததாக சதீஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பிஜேபியில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ-வின் அடையாள அட்டையும் தேர்தல் பறக்கும் படையின கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, சிக்கியவர் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு 22ஆம் தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு.. இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

இத்தகைய சூழலில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால்  சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு  பெருமாள் என்பவரை அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் குறிப்பிட்டுள்ள பெருமாள் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.