Skip to main content

“இது போன்ற ஒரு காட்டுமிராண்டித்தனம் இதுவரை நிகழ்ந்ததில்லை”- திருமாவளவன் வேதனை!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

 

இன்று(8.10.2021) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உ.பியில்  நடந்த 8க்கும் மேற்பட்டோரின் கொடூரப் படுகொலையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசியதாவது, “உ.பி. லக்கிம்பூர் என்னும் இடத்தில் கடந்த அக்.3ஆம் தேதி அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றிப் படுகொலை செய்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய வெட்கக்கேடான நிகழ்வாகும்.

 

இது போன்ற ஒரு காட்டுமிராண்டித்தனம் இதுவரை அரசியல் களத்தில் நிகழ்ந்தது இல்லை. பல நாட்கள் போராடுவது என்பது ஜனநாயக நிகழ்வில் வழக்கமான ஒன்றுதான். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் அறவழியில் போராடி வருகிறார்கள். இதனை நசுக்க நினைக்கும் பாஜகவினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் விவசாயிகளின் போராட்டங்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. அக்3 ஆம் தேதி இந்த வன்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பு நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ்மிஸ்ரா விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இரண்டே நிமிடங்களில் இந்த போராட்டத்தை நான் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன் என எச்சரித்திருக்கிறார்.

 

அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் இடைவெளியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆஷிஸ்மிஸ்ரா பயணித்த வண்டி விவசாயிகளின் மீது மோதி அவர்களை படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. மனசாட்சி உள்ள எவராலும் இதை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரதமர் மோடி இது வரை வாய்திறக்கவில்லை. கிரிக்கெட் வீரருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டால் அதற்கு டீவிட் செய்கிற மோடி இந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது பேரதிர்ச்சி ஆக இருக்கிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு முழு பொறுப்பேற்று யோகி ஆதித்தயநாத் முதல்வர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.