Skip to main content

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை! தடுத்து நிறுத்துமாறு கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
sand


சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில், “தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டம் இன்றும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மாவட்டத்தில் வைகை, தேனாறு, பாலாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு ஆறு, சருகணி ஆறு ஆகிய சிற்றாறுகளில் அவ்வப்போது வரும் நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இந்நிலையில் இந்த ஆறுகளிலும், விளைநிலங்களிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாகளுக்கு உட்பட்ட 20 கிராமங்களில்  தற்போது வரை மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. 

மாவட்டத்திலுள்ள விளைநிலங்களில் உபரி மண் என்ற பெயரில் சவுடு மற்றும் மணல் 3 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கி விட்டு, சில இடங்களில் 30 அடி ஆழத்திற்கும், சில இடங்களில் 50 அடி ஆழத்திற்கும் எடுக்கப்படுகிறது. இம்மணல் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், கண்மாய்களுக்கு மழைநீர் வருவதும் தடைபடுகிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகமோ, கனிமவளத் துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை.

 

 


மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எங்களது கட்சியும், சம்பந்தப்பட்ட கிராமங்களின் பொதுமக்களுக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இதனால் எங்களது கட்சி தலைவர்களும், ஊழியர்களும்,  சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களும் மணல் கொள்ளையினரால் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர். தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த மணல் கொள்ளைக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் உடந்தையாக உள்ளனர்.

ஏற்கனவே கரோனா தொற்றின் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிற சூழ்நிலையில், இந்த மணல் கொள்ளையின் மூலம் நீராதாரமின்றி அல்லல்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிற, அதற்கு ஆதரவாக இருக்கிற நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்வதுடன், மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி சிவகங்கை மாவட்ட மண் வளத்தையும், நீராதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.