Skip to main content

எடப்பாடி அன் கோ-வின் 'முகாரி' ராகத்தைக் கேட்டிருந்தால் எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு புரமோஷன் கூட கொடுத்திருப்பார்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

police

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, திமுக தலைவர் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும். நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், திமுக தலைவர் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.அய்கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள் என கூறியிருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

மேலும் அவர், "அரசியல் செய்கிறார், அரசியல் செய்கிறார்", என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஓலத்தைக் கண்டு அயர்ந்து போகாமல், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் தான், இன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொலைக்கார எஸ்.ஐ ரகுகணேஷின் கைது நடந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்த பிறகு தான், ஜெயராஜ் - பெணிக்ஸ் கொலை குறித்து பரவலான கவனம் ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் களம் இறங்கினார்கள். இந்திய அளவில் ஊடகங்கள் பார்வை திரும்பியது. உலக செய்தியானது. நீதித்துறை தானாக தலையிட்டது. இன்று கைது வரை வந்திருக்கிறது.

 

22 ஆம் தேதி ஜெயராஜ் - பெணிக்ஸ் இருவரும் போலீஸாரின் கொலை வெறி தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.

 

23 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார்கள். அப்போதே "திரைமறைவில் போலீஸ் ஆட்சியா?", என்ற கேள்வியை எழுப்பினார்.

 

24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், " காவல்துறை அதிகாரிகளே, அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்து நீங்களே குற்றவாளிகளாகும் செயல்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கடமையினை சரியாகச் செய்யுங்கள். கால சக்கரம் இப்படியே சுற்றிக் கொண்டிருக்காது", என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

26 ஆம் தேதி அன்று, கொலையுண்ட அப்பாவிகள் ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி மூலமாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது.

 

அன்றே, இந்தக் கொலை வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு காணொலியை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

 

sss

 

27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம், வழக்கு தொடுப்போம் என மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்று, ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறி, வழக்கில் நியாயம் கிடைக்க உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்து வந்தார்.

 

29 ஆம் தேதி, கொலையாளிகளை IPC 302இன் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

 

அன்றே, நீதிபதியை ஒரு காவலர் மிரட்டிய செய்தி வெளியான உடன், அது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்தார்.

 

30 ஆம் தேதி, தொடர்ந்து இத்தனை அறிக்கைகள் வெளியிட்டு, வலியுறுத்திய பிறகும் எடப்பாடி இது குறித்து வாய் திறக்காமல், தக்க நடவடிக்கை எடுக்காமல், கொலையாளிகளைக் காக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால், இந்தக் கொலைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி என்ற முறையில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இவ்வளவு கடுமையாக தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்.

 

"மூச்சுத் திறணலால் மரணம், உடல் நலக் குறைவால் மரணம்", என தானே டாக்டராக மாறி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்தார். அப்படியே பிரச்சினையை அமுக்கி விடலாம் என்று பார்த்தார்.

 

அந்தத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி கடம்பூர் ராஜூ "லாக்கப் மரணத்திற்கு" புதிய விளக்கம் கொடுத்தார். "காவல் நிலையத்திலேயே அடிபட்டு இறந்து போனால் தான் லாக்கப் மரணம். அவர்கள் சிறைக்கு போய், மருத்துவமனையில் இறந்தார்கள். அதனால் அது லாக்கப் டெத் அல்ல", என்று கோமாளித்தனமாக பேசினார்.

 

உதயக்குமார் போன்ற மேதாவி அ.தி.மு.க அமைச்சர்கள், தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் பெரிய விஷயமே இல்லை என்ற தோரணையில் பேட்டிக் கொடுத்தார்கள்.

 

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொடுத்த அறிக்கைகளைக் கண்டும், காணாதது போல் முதலமைச்சர் எடப்பாடி நாட்களைத் தள்ளினார்.

 

எதிர்க்கட்சி, பத்திரிகைகள், ஊடகங்கள் எனத் தொடர்ந்து ஒலித்த குரல்களைக் கேட்டு, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்தது. அதனால் தான் வழக்கு இந்த நிலைக்கு வந்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, மு.க.ஸ்டாலின் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும்.

 

எல்லோரும் பார்த்திருக்கவே, நீதிபதியை ஒரு காவலரை விட்டு மிரட்டுகிறார்கள், தடயங்களை அழிக்க முயல்கிறார்கள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றால், மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தியிருக்காவிட்டால் வழக்கை ஊற்றி மூடியிருப்பார்கள்.

 

நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், தளபதி அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.ஐ-கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள்.

 

மு.க.ஸ்டாலின் கையிலெடுத்த அரசியல் நடவடிக்கைகள் தான், இன்று இந்தக் கொலை கும்பலைக் கைது வரை கொண்டு வந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் அரசியல் தொடரும், கொலை ஆட்சியை வீழ்த்த!'' எனக் கூறியிருக்கிறார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.