Skip to main content

தென்மாவட்ட அதிமுகவினரைக் கவர சசிகலாவின் அஸ்திரம்! நடுக்கத்தில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்.  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Sasikala's next political move

 

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பினார் சசிகலா.  கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா. சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக்கூடாது என அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி அவர் அதிமுக கொடியுடனான காரிலேயே புறப்பட்டார். பெங்களூருவில் ஆரம்பித்து சென்னை வரை அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர். 

 

இதில், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறையப் பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்” என்று தெரிவித்தார். 

 

இப்படி வெளிவந்ததுமே சசிகலா தனது அரசியல் நுழைவு குறித்தான கருத்தைத் தெரிவித்துவிட்டே வந்தார். இதிலேயே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலக்கம் அடைந்தார். சென்னை வந்த சசிகலா, தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அதிமுக குறித்துப் பேசுவார் என ஒரு தரப்பினரும், அவ்வளவுதான் இனி சசிகலா அரசியலுக்கு வருவதெல்லாம் கடினம் என மற்றொரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசிவந்தனர். 

 

பிப்ரவரி 24ஆம் தேதி வரை தொடர்ந்து வந்த இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று (பிப்.24) முடிவுக்கு வந்தது. சென்னை திரும்பி தி.நகர் வீட்டிலிருந்த சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, தனது மௌனத்தைக் கலைத்து, “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார் சசிகலா. இதனால் மீண்டும் சசிகலா குறித்தான அரசியல் பேச்சுகள் காற்றில் கலக்க ஆரம்பித்தன. 

 

சசிகலாவின் அரசியல் குறித்தான பேச்சுகள் உலா வந்துகொண்டிருந்தபோதே, தமிழ்நாட்டுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து திமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி சசிகலா, இரட்டை இலையை தன் தலைமைக்குக் கீழ் கொண்டுவருவார் என மீண்டும் சசிகலா பால்டிக்ஸ் பறக்கத்துவங்கின. 

 

ஆனால், பொதுவெளியில் மௌனம் காத்த சசிகலா, அதன்பிறகு தனது ஆதரவாளர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசி ஆடியோக்களை ரிலீஸ் செய்து தன் பற்றியான அரசியல் பேச்சுகளை ‘ஹாட் டாப்பிக்’காகவே வைத்திருந்தார். அதேசமயம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நிலை மிக மோசமாக, மருத்துவமனையிலிருந்த அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.-ன் துணைவியார் மறைவுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினார். இதுவெல்லாம் அதிமுக மத்தியிலும், மற்றக் கட்சியினர் மத்தியிலும் சசிகலாவைக் கள அரசியலில் நிறுத்திவைத்துக்கொண்டே இருந்தது. 

 

சசிகலா பற்றியான பேச்சுகள் தொடர்ந்து எழுந்தாலும், சசிகலா நேரடியாக அரசியல் குறித்துப் பேசாததால் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலுமே ஒருவித அமைதி நிலவியது. ஆதரவாளர்களின் ஆராவாரம் குறைவதற்குள் மீண்டும் அடுத்த தீப்பொறியைக் கிளப்பினார் சசிகலா. கடந்த 17ஆம் தேதி அதிமுக தனது பொன் விழா ஆண்டை கொண்டாடியது. இதற்கு முன்னதாகவே திட்டமிட்ட சசிகலா, ‘பொன்விழா ஆண்டில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவது. பின் எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்று மரியாதை செய்வது’ என பக்காவாக ஸ்கெச் போட்டு ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தார். இதில், அதிமுகவின் துவக்க நாளான 17ஆம் தேதிக்கு முன்னதாகவே அதாவது 16ஆம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்ல திட்டமிட்டு அதன்படியே சென்றார். மேலும், 17ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வாணியம்பாடியில் பேசிய, ‘அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ எனும் அதே கருத்தை மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

 

அதேபோல், தி.நகரில் உள்ள ஜானகி, எம்.ஜி.ஆர். இல்லத்தில், ‘அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டைத் திறந்து வைத்து மீண்டும் எடப்பாடியைப் பதட்ட நிலையில் அமர்த்தினார் சசிகலா.

 

பொன்விழாவில் எடப்பாடியின் பிரஷரை எகிற வைத்த சசிகலா, அடுத்ததாக வரும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கரின் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்களாம். முத்துராமலிங்கருக்கு மரியாதை செலுத்தும் சசிகலா, அங்குப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் அப்போதும் அரசியல் குறித்த அடுத்த அறிவிப்போ, தகவலோ வெளிவரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இந்நிகழ்ச்சியின் மூலமாகவும், பயணத்தின் மூலமாகவும் தென் மாவட்ட அதிமுகவினரை சசிகலா கவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.