Skip to main content

“எடப்பாடியின் ஆட்டத்தை சசிகலா முடித்து வைப்பார்..” - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

"Sasikala will end Edappadi.." MK Stalin's speech!


பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார். அவர் வெளியே வந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

 

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே உள்ள குரும்பப்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.18) மாலையில் நடந்தது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

 

கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பலர், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும், பொதுக்கழிப்பறை, சுகாதார வசதிகள் இல்லை என்றும் கூறினர். 

 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுவந்த சுழல்நிதி நிறுத்தப்பட்டதால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் துயர் துடைக்க தி.மு.க. வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 

இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், “இங்கே பேசிய பெண்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் பல பணிகள், உள்ளாட்சித்துறை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டியவை. ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஊழல்மணியாக திகழ்ந்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் சமையல் காஸ் சிலிண்டர், பருப்பு, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருந்தன. இப்போது அவை கடுமையாக விலை உயர்ந்துள்ளன. 

 

இதுபோன்ற விஷயங்களை சுட்டிக்காட்டினால், இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இதனால் அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். இவர் எப்படி முதல்வர் ஆனார்? என்பது அனைவருக்கும் தெரியும். துரோகம் என்பதற்கு  இவர்தான் உதாரணம். வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்து விடும்.  சசிகலாவால் முதல்வரான இவர், அவருக்கே துரோகம் செய்தார்.

 

ஜெயலலிதா ஆட்சி என்று பேசிக்கொள்ளும் இவர்கள், அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையையும் வெளியே கொண்டுவரவில்லை. சாதாரண மனிதருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் என்ன வியாதி, எப்படி இறந்தார் என்று கேட்பது இயல்பு. ஆனால், முதல்வரான ஜெயலலிதாவின் இறப்பு குறித்து இதுவரை உண்மை தெரியவில்லை. 

 

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்து, நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து கமிஷன் அமைத்தனர். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இதற்கு விடை தரவில்லை. இதைப்பற்றி எல்லாம் முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவரின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பதுதான்.

 

கரோனா காலத்தில்கூட கொள்ளையடித்த கும்பல் இந்தக் கும்பல். முகக்கவசம், விளக்கமாறில் கூட கொள்ளையடித்த கும்பல். இந்தக் கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். அந்த முடிவில்தான் நீங்கள் அனைவரும் வந்து இருக்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து சேலம் வருகை தந்த அவருக்கு, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.