Skip to main content

சசிகலாவை நான் நேரில் பார்த்தது இல்லை... பாஜகவின் திட்டத்தால் ஏற்பட்ட சிக்கல்... அமித்ஷா சொன்ன வாழ்த்து!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்கிறது மன்னார்குடி வகையறா. சசிகலா குடும்பத்துக்கு எதிராக பா.ஜ.க.வினர் வருமான வரித்துறையை ஏவி விட்டு சசிகலா இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு பினாமி சொத்துகள் சேர்த்திருக்கிறார் என கோர்ட்டில் சமர்ப்பித்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்பொழுது முதலமைச்சரான ஓ.பி.எஸ். மூலமாக 140 கோடி ரூபாய் அளவிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள் என எகிறி அடிக்கிறார்கள்.

 

sasikala



அது தவிர, சசிகலா மேல் 91-96 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. போதாக்குறைக்கு அபராதம் கட்டாத பிரச்சனை வேறு. இதில் ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி சசிகலாவை சிறைக்குள்ளே வைத்திருக்கும் முயற்சியை பா.ஜ.க. மேற்கொள்ளும் என்கிறார்கள் சசிகலாவை எதிர்க்கும் அ.தி.மு.க.வினர். ஆனால் சசிகலா தரப்பினரோ, இதற்கு வேறுவிதமான விளக்கத்தை அளிக்கிறார்கள்.


சசிகலா குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையை ஏவி, அவர் 2,000 கோடி ரூபாய் பினாமி சொத்து சேர்த்தார் என வருமான வரித்துறை சொன்னது. ஆனால் பினாமி சொத்துகளை வைத்திருப்பதாக சொல்லப்படும் ஒருவர் கூட சசிகலாவை நான் நேரில் பார்த்தேன், அவரிடம் பேசினேன் என சாட்சியமளிக்கவில்லை. எனவே அதை அப்பீலில் முறியடிக்க முடியும். சசிகலாவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் அத்தனை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளிலும் தடையாணை பெறப்பட்டுள்ளது. அந்த தடையாணையை உடைத்துவிட்டு வழக்கு நடத்தி சசிக்கு தண்டனையை வாங்கி தந்தாலும் அதற்கும் அப்பீல் போக வழி உள்ளது.

 

 

bjp



சசிகலாவின் சிறைத் தண்டனையை நீடிக்கும் வழக்கு என்பது "பெங்களூரு சிறையில் சிறை விதிகளை மீறினார்' என்ற வழக்குதான். அந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்துக்கே செல்லவில்லை. குன்ஹா விதித்த அபராத தொகையான பத்து லட்சத்தை சசிகலா கட்டினால் குற்றவாளி என சசிகலா ஒத்துக் கொண்டதாகிவிடும். அது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை பாதிக்கும். அபராதம் கட்டவில்லையென்றால் சசியின் சொத்துகளை விற்க குன்ஹா உத்தரவிட்டுள்ளார். அதை எடப்பாடி அரசு செய்யட்டும்.

சட்டப்படி 2021-ம் வருடம் பிப்ரவரி 14-ம் தேதி விடுதலையாக வேண்டும். இதே வழக்கில் 40 நாட்கள் ஜெ.வும் சசியும் சிறை யில் இருந்த 35 நாட்களில், சசி பரோலில் வந்த 17 நாட்கள் கழிந்துவிடும். சசிகலா அடுத்த மாதம் சொத்துக் குவிப்பு வழக்குக்கெதிராக க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சசிக்கு நல்ல தீர்ப்பு வரும். அதனால்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, திவாகரனின் மகன் திருமணத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார் என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.