Skip to main content

“நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்..” - சசிகலா  

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Sasikala addressed press and talk about admk

 

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற அதிமுகவால் மட்டுமே முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனை நடத்தி, ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ. அதுபோல் நாங்கள் செய்வோம். நாங்கள் தான் அதிமுக. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும்” என சசிகலா தெரிவித்துள்ளார். 

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனை எதிர்க்கட்சிகள், நாட்டிற்கு பெருமை என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் என இருக்கிறோம் என்பதை வெளியே காட்டுவதற்காக இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கிறார்கள்.  

 

ஒரு கட்சி, இயக்கம் என்று இருந்தால் அதில் தொண்டர்களின் விருப்பம்தான் வெற்றி பெறும். அதனால், அதிமுக விவகாரத்தில் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது விரைவில் தெரியும். அதிமுகவின் அரசியல் மாற்றம் 2024ல் தெரியும். ஓ.பி.எஸ். சந்திப்பு நடக்கலாம். அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என் வேலை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி இருவரும் தனி அணியாக இருந்தனர். அப்போதே இந்தப் பணிகளை செய்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.

 

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற அதிமுகவால் மட்டுமே முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனை நடத்தி, ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ. அதுபோல் நாங்கள் செய்வோம். நாங்கள் தான் அதிமுக. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும். தொண்டர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஒரு கட்சியின் தலைமை என்று சொல்ல முடியும். அதனை வருங்காலங்களில் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்வில் சிறுமி உயிரிழப்பு; ஆர்டிஓ விசாரணை

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Girl issue in event given by ADMK welfare schemes RTO investigation

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த சூழலில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவஸ்ரீ (வயது 14) என்ற சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி மயங்கி உயிரிழந்தது தொடர்பாக, ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் மூச்சுத் திணறியோ, மிதி பட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.