Skip to main content

பாமக வேடிக்கை பார்ப்பது ஏன்? ராஜேஸ்வரி ப்ரியா 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

பாமகவில் 2017 மார்ச் மாதம் முதல் ''பாமக இளைஞர் சங்க செயலாளர்'' பதவி வகித்தவர் ராஜேஸ்வரி பிரியா. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார். 
 

இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், 

 

Rajeshwari Priya


 

நான் பாமகவில் இருந்து வெளியே வந்தபோது அக்கட்சியை எந்த குறையும் சொல்லாமல் வெளியே வந்தேன். சனிக்கிழமை புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்தேன். இந்த தகவலையடுத்து பாமக தொண்டர்கள் தவறான பதிவுகளையும், ஆபாசமான வீடியோக்களை தயார் பண்ணுவதாக முகநூலில் பதிவிடுகிறார்கள். இதனை கண்டித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்துள்ளேன். 

 

பாமகவில் உள்ளவர்களுக்கு நான் அரசியல் கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லையா என்று தெரியவில்லை. பாமகவில் நான் இருந்தவரை அக்கட்சியின் தலைமையை நான் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில் பாமக தொண்டர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அவர்கள் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். நான் தவறான விஷயத்தையோ, தவறான வார்த்தைகளையோ சொல்லியிருந்தால் அவர்கள் கோபப்படலாம். இதுவரை நான் பாமகவை பற்றி குறைசொல்லவே இல்லை. 
 

முதலில் கொலை மிரட்டல் வந்தது. பின்னர் மார்பிங் செய்து வீடியோ வெளியிடுவோம் என்று சொன்னதற்கு பிறகு புகார் கொடுக்காமல் எப்படி இருக்க முடியும்? அதுமட்டுமில்லாமல் மற்ற பெண்கள் பொதுதளத்திற்கு வர பயப்பட ஆரம்பிப்பார்கள். பாமக தலைமை ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கவில்லை?. ஒரு  பெண்ணை எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என்று அவர்கள் விட்டுவிடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படி நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்? அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்கட்டும், யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு அரசியல் கட்சி? அரசியல் கட்சிகளையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் வேரோடு அறுப்பதுதான் என்னுடைய வேலை. 
 

இதை கண்டுக்காமல் விட்டால், ஏன் நடந்தபோது அப்பவே சொல்லலனு நமக்கே ஒரு கேள்வி வரும். நேற்று பதிவு போட்டிருந்தவர், " மாணவர் சங்க செயலாளர்"ன்னு பெயர் போட்டிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியே வந்துகூட இதுவரைக்கும் பாமக பற்றி எதுவுமே வெறுப்பாக பேசியதே இல்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசுவதையும், பதிவு போடுவதையும், ஏன் பாமக வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது? ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?
 

பாமகவில் நான் இருந்தவரை எனக்கு உரிய மரியாதை கிடைத்தது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நான் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதனால் என்னை பற்றி இப்படி பதிவு போடுகிறார்களா என்பது தெரியவில்லை. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கேட்டு கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய்யுள்ளோம். அப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற பதிவுகளை போடுகிறார்கள் என்றால் இந்த மாதிரியான ஆண்களே இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.