Skip to main content

ஜம்மு - காஷ்மீர் நிலவரம்; உங்களால் முடியுமா? - அமித்ஷாவிற்கு ராகுல் சவால்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Rahul challenges Amit Shah on Jammu and Kashmir

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 3,970 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் குமரியில் துவங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு ராகுல் காந்தி மேற்கொண்டார்.

 

ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கு கொண்டனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும்  கலந்துகொண்டனர். 

 

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காந்தியின் நினைவுநாளான இன்றுடன் நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்தார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார்.

 

இதையடுத்து நிறைவு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பாஜக தலைவர்கள் கூறுவது போல் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை. படுகொலைகள், குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் நான் இதைப்பற்றி பேசும்பொழுது பாதுகாப்பு மேம்பட்டு இருந்தால், ஏன் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று என்னிடம் திருப்பி கேட்டனர்.

 

நான் காஷ்மீரில் நுழைந்த 21ம் தேதி முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சி தான் எனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. காஷ்மீரில் மிக நல்ல முறையில் இருந்தால் பாஜகவினர் ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை ஏன் பாதயாத்திரை நடக்கக் கூடாது. மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை என்னை போன்று யாத்திரை நடத்தத் தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்.

 

எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கிறது என பாஜக கூறி வருகிறது. எந்த அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. பாஜகவிற்கு எதிராகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் பார்வையும் உள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் பேசி ஒற்றுமையுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பாகுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாஜகவை எதிர்ப்பதில் ஒற்றுமையாகவே உள்ளனர்.

 

இந்த போர் ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நடைப்பயணம் மேற்கொண்டபோது ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் மக்களைச் சந்தித்தேன். இங்கு நடைபெற்று வரும் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ஒற்றுமை பயணம் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தேசிய அரசியலில் பிரம்மாண்ட நிகழ்வை உண்டாக்கும் என நம்புகிறேன். ஆனாலும் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.