Skip to main content

“எதிர்த்துப் போராடிய இளைஞர்களை மோடி மிரட்டினார்” - ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Rahul Accusation PM Modi on his bharat jodo yatra
கோப்புப் படம் 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடை பயணம், இன்று வெள்ளிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரியானாவை எட்டியது. ஹரியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய ராகுல் காந்தி, ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் அக்னிபாத் திட்டம், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

 

ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், தற்போது அவரது பேச்சின் மீதான கவனம் இந்தியா முழுக்க அதிகரித்துள்ளது. ஹரியானாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை பறிப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதுநாள்வரை இளைஞர்கள் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுவந்தனர். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த அக்னி பாத் திட்டத்தின் மூலம், ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் தூக்கியெறியப்பட்டுள்ளது. 6 மாதம் பயிற்சி, 4 ஆண்டு காலம் மட்டுமே ராணுவத்தில் பணி என்பதன்மூலம், ராணுவ வீரர்களின் ராணுவத்துக்காக சேவை செய்யும் கனவு பறிக்கப்பட்டதோடு, அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களும் நீக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதுதான் மோடி சொல்லும் புதிய இந்தியா” என்று கடுமையாக மோடி அரசை விமர்சித்தார்.

 

மேலும், “இந்த அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்த இளைஞர்களை, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியானால் அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை தரப்படமாட்டாது என்று மோடி மிரட்டினார். இப்படியாக, இளைஞர்களை மட்டுமல்லாது, விவசாயிகள், தொழிலாளர்களைப் பயமுறுத்துவது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

 

21ஆம் நூற்றாண்டில், ஹரியானா வேலையில்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., இம்மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்தியாவில் இரண்டுவிதமான இந்தியாக்கள் உள்ளன. ஒரு இந்தியாவில், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் நிறைந்திருக்கிறார்கள். இன்னொரு இந்தியாவில் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியை வைத்திருக்கும் 200 - 300 பெருந்தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரியமைப்பும், இந்த அரசின் கொள்கைகள் கிடையாது, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழிக்கும் ஆயுதங்கள்!

 

எனது நடை பயணத்தில் கிழிந்த ஆடைகளுடன் கலந்துகொள்ளும் எண்ணற்ற எளிய மக்களையோ, பேசும் பேச்சுக்களையோ கவனத்தில் கொள்ளாமல், நான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டை ஊடகங்களும் மற்றவர்களும் விமர்சனம் செய்கிறார்கள். நாட்டில் பரவிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையை அகற்றிவிட்டு, மக்களின் கவனத்தை ஈர்ப்பதே நடை பயணத்தின் நோக்கம்.

 

எனது நடை பயணத்தில் குளிர்காலத்தில் டி-ஷர்ட் அணிந்திருப்பதால் என்னால், 110 நாட்களில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடக்க முடிந்திருக்கிறது. குளிரின் தாக்கம் எனக்கு ஏற்படவில்லை. இந்த நாட்டில், விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஏன் டி-சர்ட்கள் மற்றும் ஸ்வெட்டர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? ஏன் கிழிந்த ஆடைகளில் இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.

- தெ.சு.கவுதமன்

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.