Skip to main content

"நாட்டு மக்களின் ஜனநாயகம் காக்க தெருவில் இறங்கி போராடுவோம்" - நாராயணசாமி

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

puducherry narayanasamy talks about indian democracy 

 

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதியில் நடைப்பயணம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

நடைப்பயணம் இந்திரா காந்தி சதுக்கம் அருகே வந்த போது ராகுல்காந்தியின் எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலை தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, " குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் எம்.பிக்கு இரண்டு ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு  ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்கள் இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்துச் சென்றனர். அதற்கு நரேந்திர மோடி துணையாக இருக்கிறார் எனக் கூறியதற்கு மோடி சமுதாயத்தையே ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என வழக்கு போடப்பட்டுள்ளது.

 

இது ஒரு பொய் வழக்கு. மோடி சமுதாயத்தை தவறாகப் பேசவில்லை என்பது ராகுல் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சைக் கேட்கும் போது தெளிவாகத் தெரியும். இது பழிவாங்கும் நடவடிக்கை. 'அதானியை பணக்காரராக்கி பொதுத்துறை நிறுவனங்களை அவருக்கு வழங்கி உள்ளீர்கள். இது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும்' என்று ராகுல் பார்லிமெண்ட்டில் கேள்வி எழுப்பினார். இப்படி ராகுல் கேள்வி எழுப்புவதை, பேசுவதை தடுக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடப்பட்ட சதி இது. இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்போம். நாட்டு மக்களின் ஜனநாயகம் காக்க தெருவில் இறங்கி போராடுவோம். இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.