Skip to main content

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறதா? என்ன செய்யப் போகிறார் நாராயணசாமி? பதற்றத்தில் காங்கிரஸ்! 

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

congress

 

கரோனா தாக்குதலில் புதுச்சேரியும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 5 அன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய படியே, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நிலவுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு அமைச்சர்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத பலவீனமான அரசாக இந்த அரசு செயல்படுவதைவிட முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசு, பதவி விலக வேண்டும் எனவும் சந்தடி சாக்கில் ஆட்சி மாற்ற ஆலோசனை(!)யைத் தெரிவித்தார்.

 

ஏற்கனவே பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுத்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

 

congress

 

நாராயணசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வோ, வருகின்ற 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் மக்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து (3லட்சத்து 50 ஆயிரம்) ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தலா ரூ .10,000 ரூபாய் வழங்கலாம். இதற்கு ரூ. 350 கோடி மட்டும் தான் தேவைப்படும் . இந்த வருடத்திய பட்ஜெட் திட்ட செலவுகளுக்கு ஒதுக்கப்படும் உத்தேச தொகை ரூ. 2,500 கோடியில், ரூ. 350 கோடியை நேரடிப் பணமாற்றம் மூலம் மக்களுக்குச் சென்றடைந்தால் கரோனாவால் பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவிற்கு மீள்வார்கள். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டங்களைத் தவிர வேறு அனைத்து அடிப்படை கட்டமைப்பு திட்டங்களையும் ஓராண்டிற்குத் தள்ளி வைத்து விட்டு இதைச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை முதலமைச்சரிடம் மனுவாக அளித்ததுடன் பொது வெளியிலும் அதனைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து மனு அளித்த துணை சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான எம்.என்.ஆர்.பாலனும் ஊடகங்களிடம் பேசும்போது, “அதிகாரிகளைச் சரியாக வேலை வாங்கவில்லை என அதிருப்தி வெளியிட்டார். விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் பெயர்களும், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் பெயர்களும் அதிருப்தி லிஸ்ட்டில் அடிபடுகிறது.

 

இந்தத் திடீர் போர்க்கொடிக்கு என்ன காரணம்? துணை சபாநாயகராக உள்ள பாலன், அமைச்சர் பதவிகள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். அதன்மூலம் எம்.எல்.ஏக்களும் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும் எனத் திட்டமிடுகிறார். பதவியில் இருந்து பலன் பார்க்கும் அமைச்சர்கள் இதை ஏற்பார்களா? அதுதான் எம்.எல்.ஏ.க்களை அதிருப்திக்குள்ளாக்குகிறது. தனவேலு ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். சீனியர் எம்.எல்.ஏவான லஷ்மி நாராயணன் ‘அரசின் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையீடு கூடாது’ என அரசுக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியவர். அவரும் அதிருப்தியடைய காரணம், வைத்திலிங்கம் எம்.பி. ஆனதும் சபாநாயகர் பதவி தனக்குக் கிடைத்தால் கவுரவம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி சேர்மேன் பதவியும் கிடைக்கவில்லை. தனக்காக நெல்லித்தோப்பை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை காமராஜ் நகர் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் முதல்வர். ஆனால் அவருக்கும் தொகுதியில் உள்ள முதல்வரின் ஆதரவாளர்களுக்கும் ஒத்துப்போக வில்லை. ஊரடங்கு விதிமீறல் வழக்கு ஜான் குமார் மீது பாய்ந்ததால் அவர் தன் வீட்டு வாசலில் இருந்த கட்சிக்கொடியை இறக்கும் அளவுக்கும் நிலைமை போயிருக்கிறது.

 

congress

 

அமைச்சர் நமச்சிவாயத்தைப் பொறுத்த வரை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடுங்கியதால் கடுப்பில் உள்ளார். மல்லாடியோ தன் மீதான ஊழல் புகார்களை கிரண்பேடி துரிதப்படுத்தும் நிலையில் நாராயணசாமி ஆதரவாக இல்லை எனக் கருதுகிறார். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க அமைச்சர் கந்தசாமி அடுத்தது முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என நினைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல். ஏக்களை கூட கண்டுகொள்ளாமல் தினமும் ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி பாண்டியன் மற்றும் சில என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க எம்.எல்.ஏக்களிடம்தான் நெருக்கமாக இருக்கிறார் எனும் கடுப்பு வேறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு என்கின்றனர் புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள்.

 

http://onelink.to/nknapp

 

முன்னாள் முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் இதனைத் தனக்குச் சாதகமாக்க காய் நகர்த்துகிறார். பா.ஜ.கவோ அமித்ஷாவின் ஆலோசனைப்படி ஆட்சி மாற்றத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ என்.எஸ். ஜெ.ஜெயபால், அ.தி.மு.க எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் ஆட்சி கவிழ்ப்புக்காக பேரம் பேசப்பட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணி சபாநாயகரிடம் புகார் அளித்தார். தற்போது கரோனா ஊரடங்கிலும் ஆரோவில்லில் முகாமிட்ட பா.ஜ.க. புள்ளிகள் இதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டனர். சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என்பதுதான் வியூகம்.

 

புதுதில்லிக்கும், புதுச்சேரிக்குமாக அரசியலில் பல அவதாரங்களை எடுத்தவர் முதல்வர் நாராயணசாமி. இந்த முறை என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.