Skip to main content

''மது விலக்கை தீர்மானிக்கும் அதிகாரம் கிராமசபைக்கு வழங்க வேண்டும்''-பாமக ராமதாஸ் கோரிக்கை!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

The power to decide the prohibition of alcohol should be given to the village council! -pmk Ramadas request!

 

மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டுறிந்தார். அவைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்திருக்கிறார் ஸ்டாலின். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சரே நேரில் பங்கேற்றிருப்பது அனைத்து தரப்பின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.

 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஒருவர் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கிராம சுயராஜ்யம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

 

இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்லத் தொடக்கமாகக் கருதலாம். அதேநேரத்தில் கிராமங்களுக்கு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்க விடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்யமாகும்.

 

ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மது தான். மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறி விட்டேன். ஆனாலும் மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

 

மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்கு சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். இந்தியாவில் அதிக இளம் விதவைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக விபத்துகள் மற்றும் தற்கொலைகள் நிகழும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதற்கு காரணம் மது தான். பள்ளிகளுக்குச் செல்லும் பதின்வயது பாலகர்கள் கூட வகுப்பறைகளில் மது அருந்திய நிகழ்வுகள் கொரோனா காலத்திற்கு முன்பு வரை செய்திகளில் வந்து கொண்டு தான் இருந்தன. கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

 

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அரசே மது விற்பனை செய்வதாக கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அது தான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

 

மராட்டிய மாநிலத்தில் ‘1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்’படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப்பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதில்  பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

 

இந்த யோசனையை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநலவழக்கில் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த  நீதிபதிகள்,‘‘ மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழ்நாடு அரசு இந்த யோசனையையும் மதித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம் ’மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?’ என்பது தான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்து விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது.

 

அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பா.ம.க. தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்க பா.ம.க. தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராமசபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.