Skip to main content

போதை இளைஞர்கள் தாக்கியதில் ஊர்க்காவல் படைவீரருக்கு கை முறிவு! 3 பேர் கைது!  

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
Puducherry


புதுச்சேரியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதையடுத்து இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரதீபன் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன், நெல்சன் ஆகியோர் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது முகக்கவசம் அணியாமலும், கஞ்சா மற்றும் மதுபோதையிலும் ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வாகன ஓட்டிகளுடன் சிக்னலில் நின்றனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நெல்சன் கூறியுள்ளனர்.


அவர்கள் கீழே இறங்காமல் தகராறு செய்ததுடன் ஊர்க்காவல் படை வீரர்களை தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் அந்தப் பகுதியில் பணியிலிருந்த கோரிமேடு போலீசார் அவர்களைப் பிடித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை நடத்தினர். 


விசாரணையில் அவர்கள் திலாஸ்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்த அறிவழகனின் மகன் கௌதம்(22), சிவசங்கர் என்பவரின் மகன் தமிழரசன்(19), தேவராஜ் என்பவரின் மகன் முகேஷ்(20) என்பது தெரியவந்தது.


அதையடுத்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ரவிச்சந்திரனின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஊர்க்காவல்படை வீரரான நெல்சனும் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.