Skip to main content

தி.மு.க செய்த தவறை அதிமுக செய்யக்கூடாது! ராமதாஸ்

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு  அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனம் முன்வந்திருப்பதாகவும், அதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆலை அமைவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும்.
 

ramadoss



 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் முதலீடுகள் மிகவும் அவசியம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி  உணர்ந்திருக்கிறது. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக உன்னதமான பல யோசனைகள் முன்மொழியப்பட்டிருந்தன. அதே நேரத்தில் தங்கக் கத்தி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, முதலீடுகள் என்பதற்காக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய  தொழில்திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத திட்டம் தான்.
 

கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்தால் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும்; சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நன்மைகளை விட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் வேதி ஆலைகளில் இருந்து வெளியாகும் நிலத்தில் சேர்ந்ததால் நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள்   கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.  

 

நிலத்தடி நீரில் டயாக்சின் கலந்திருப்பதால் அப்பகுதிகளில் வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீரிலும் டயாக்சின் உள்ளது; இதையெல்லாம் கடந்து நிலத்தடி நீரை பயன்படுத்தும் தாய்மார்களின்  தாய்ப்பாலிலும் டயாக்சின் வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் புனிதமான மருத்துவப் பொருள் என்று போற்றப்படும் தாய்ப்பாலில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அந்தப் பகுதி மக்கள் வாழத்தகுதியற்றதாக மாறி விட்டது என்று தான் அர்த்தமாகும். அதனால் தான் கடலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் சீரழிவு மிகுந்த கறுப்பு மாவட்டம் என்றழைக்கப்படுகிறது.


 

முந்தைய திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில் இதேபோன்ற  பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை  நாகார்ஜுனா நிறுவனத்தின் மூலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. முந்தைய திமுக ஆட்சியில் உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழக அரசின் வளங்களை தாரை வார்த்து 2008-ஆம் ஆண்டில்   அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெர்மனியில் 1970-ஆம் ஆண்டுகளில் மூடப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பழைய எந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த ஆலை,   சுத்திகரிப்பை தொடங்குவதற்கு முன்பே தானே புயலில் சிக்கி சேதமடைந்ததால் கடலூர் மாவட்டம்   தப்பியது.
 

அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்பாகவே, நாகார்ஜுனா நிறுவனம் கோடிகளைக் குவிக்க வேண்டும் என்பதற்காக  கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள   57,345 ஏக்கர் நிலங்களை வளைத்து ரூ.92,000 கோடியில் பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை  அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது 2006-11 தி.மு.க ஆட்சி தான். அத்திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால், கடலூர் - நாகை மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதனால், அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமின்றி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கருத்துக் கேட்புக்கூட்டங்களை நடத்தினார். பா.ம.க.வின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், 2018-ஆம் ஆண்டில் நாகார்ஜுனா நிறுவனம் திவால் ஆனதாலும் அந்த திட்டம் முடங்கியது. அதனால், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் தற்காலிகமாக தப்பித்தன.


 

அப்போது தப்பித்த கடலூர் மாவட்டத்திற்கு ஹால்தியா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் மிகப்பெரிய ஆபத்தையும், சீரழிவையும் கொண்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. காவிரி டெல்டாவின் கடைமடையான கடலூர் மாவட்டம் முப்போகம் விளையும் பூமியாகும். அந்த மண் தான் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவையும் வழங்குகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கும், உழவுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டனவோ, அதைவிட மோசமான பாதிப்புகள் ஹால்தியா ஆலை வந்தால்  கடலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
 

2008&ஆம் ஆண்டில் நாகார்ஜுனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை என்ற சீரழிவை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் அப்போதைய திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறை, ஹால்தியா ஆலையை கொண்டு வருவதன் மூலம் அதிமுக அரசும் செய்யக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் ஹால்தியா ஆலை மட்டுமல்ல.... வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் எந்த ஒரு பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.