Skip to main content

மோடியையும் மிஞ்சிய பழனிசாமி! பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

மக்களுக்கு அல்வா கொடுப்பதில், இரட்டை வேடம் போடுவதில் மோடியையும் மிஞ்சிய பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதா தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

 

narendra modi - edappadi palanisamy



 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வரலாற்றைத் திரிப்பதிலும் அறிவியலையே சிதைப்பதிலும் கைதேர்ந்தவர் நமது பிரதமர் மோடி. உதாரணத்திற்கு, புராண காலத்திலேயே ஏவுகணை, ராக்கெட், இன்டர்நெட் எல்லாமே இருந்தது என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தெரிந்தே செய்யும் இது, மக்களுக்கு திருநெல்வேலி அல்வாவே கொடுப்பதும் இரட்டை வேடம் போடுவதுமேயாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

ஆனால் இந்தக் கலையில் மோடியையும் மிஞ்சியவர் தமிழக முதலமைச்சர் பழனிசாமிதான் என்றால் அதிலும் சந்தேகம் இருக்க முடியாது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்.
 

அண்மையில் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் வைத்துப் பேசும்போது, “தமிழக காவிரி டெல்டா பகுதி ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவிக்கப்படும்; அதற்கான ‘சட்ட நடவடிக்கை’யும் எடுக்கப்படும்” என்றார். உடனே நாம்கூட, ‘ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் அது எப்படி சாத்தியமாகும்’ என்று கேள்வி எழுப்பினோம்.
 

ஆனால் இதையெல்லாம் சட்டையே செய்யாத பழனிசாமி இப்போது ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தச் செய்தியைப் படித்தபோதுதான் அதில் செய்யப்பட்ட ஊடுவேலை’ தெரிந்தது. அதாவது தலைப்பில்தான் ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’என்பதே தவிர, உள்ளே ‘ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும்’ என்பதுதான் செய்தியின் சாரம்.


 

அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதை வைத்தே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அவர், “எனது தலைமையில் அதிமுக எம்பிக்கள் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த 10ந் தேதி ஒன்றிய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தைக் கொடுத்தோம். அதில் ‘ஏற்கனவே அங்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் எண்ணெய், கியாஸ் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் திட்டம் 1985ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதை மத்திய, மாநில முகமைகள் கண்காணித்து வருகின்றன. இதற்கு மேலும் ஏதாவது புதிய திட்டம் வந்தால் டெலா மண்டலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைரோகார்பன் ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள் தொடர்பாக எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியை நீக்கும் ஷரத்தை சேர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 

இந்த செய்தியைப் படித்தபோது, இதுவரை அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாதது போலவும் இனிமேலும் வரக்கூடாது என்பதாகவும்தானே ஆகிறது? எப்படிப்பட்ட பச்சைப் பொய் இது!
 

2018இல் அமைச்சர் கருப்பண்ணன், “இங்கு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆகவே மக்களிடம் கருத்துக் கேட்கவும் வேண்டாம், சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டாம்” என்று எழுதிய கடிதத்தின்படிதானே சம்பந்தப்பட்ட அந்த சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு அனுமதி அளித்தது ஒன்றிய அரசு!


 

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற முதல்வர் பழனிசாமி, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region) அமைப்பதற்காக, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தாரே! ஏற்கனவே இதற்காக 2017 ஜூலை 19ந் தேதி அதிமுக அரசு வெளியிட்ட குறிப்பாணையில் (Notification) கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததே!

இவை மட்டுமா? ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம்’ என்று சட்டமன்றத்திலேயே சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி அளித்ததே அதிமுக அரசு!
 

இவ்வளவையும் செய்துவிட்டுத்தான் ‘காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’ என்பதாகக் கடிதம். இது பச்சைப் பொய் மட்டுமல்ல; இரட்டை வேடம் போடுவதாகும், மக்களுக்கே அல்வா கொடுப்பதாகும்.
 

இப்படி இரட்டை வேடம் போட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பது கூட பழனிசாமி அரசுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ‘நீட்’ விடயத்தில் நடந்ததுதானே இது! ஒன்றிய அரசுக்கு சட்டமன்றத் தீர்மானம்தான் அனுப்பியிருக்கிறதே என்று சொல்லியேவந்து, கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தானே தீர்மானத்தை எப்போதோ ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்ட உண்மை தெரியவந்தது!
 

அது மட்டுமா? குடியுரிமைத் திருத்த சட்ட (சிஏஏ) மசோதாவுக்கு ஆதரவாக தன்னோடு தன் சகா பாமகவையும் சேர்த்து மாநிலங்களவையில் வாக்களிக்கவைத்து அதைச் சட்டமாக்கி, இந்தியாவையே போராட்ட ரணகளமாக்கியிருக்கிற கட்சிதானே பழனிசாமியின் அதிமுக!


 

tvk



இதைச் செய்துவிட்டு, சிறுபான்மையருக்குப் பாதிப்பென்றால் முதல் ஆளாய் முன்னிற்போம் நாம் என்கிறது அதிமுக. ஆனால் சென்னை பழைய வண்ணார்பேட்டையில் ‘சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டுப் போராடிய இஸ்லாமியர்களை, பெண்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்த அரசுதானே அதிமுக!
 

இந்த மாதம் 28ந் தேதிவரை போராட்டத்திற்கு அனுமதியே கிடையாது என்று அறிக்கை செய்திருக்கிறதே சென்னை மாநகர் போலீஸ், அது ஏன்? இஸ்லாமியர்கள் போராடக் கூடாது என்றுதானே! இதையும் மீறி அங்கு என்ன தமிழ்நாடு முழுவதுமே சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறதே அதற்கென்ன சொல்லும் இந்த அரசு?

அதனால்தான் மக்களுக்கு அல்வா கொடுப்பதில், இரட்டை வேடம் போடுவதில் மோடியையும் மிஞ்சிய பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!'' இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.