Skip to main content

“வேங்கைவயல் முதல் கள்ளச்சாராயம் வரை” - லிஸ்ட்போட்ட இ.பி.எஸ் 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Palaniswami Das Complaint With Governor Rn Ravi About Tamil Nadu Govt

 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்ன மலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “  திமுக அரசின் 2 ஆண்டுக்கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை ஆளுநர் பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ.வை அலுவலகத்தில் புகுந்து கொலை செய்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து சேலத்தில் ஒரு வி.ஏஓ.வை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆக இப்படி நேர்மையாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது. 

 

விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதையடுத்து தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து 20 பேருக்கும் மேல் உயிரிழந்த போதே இந்த அரசங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் தஞ்சையில் நேற்று இரண்டு உயிர்கள் பலியாயிருக்காது. ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம், இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இருவரும் பாரில் மது குடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மாவட்ட நிர்வாகம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அரசு அதிகாரிகளை வைத்து அரசு இது போன்று முயற்சி செய்கிறது. வேங்கை வயல் சம்பவத்தில் கூட இன்னும் முழு நடவடிக்கை இல்லை. இப்படித் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு காவல்துறையைப் பார்த்து பயம் கிடையாது. எதாவது நடவடிக்கை எடுத்தால்தானே பயம் இருக்கும். 

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று டிஜிபியும், சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று முதல்வரும் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் 2020 ஆம் ஆண்டில் 31 பாலியல் வன்கொடுமையும், 2021 ஆம் ஆண்டு  32 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த தகவல் எல்லாம் அவர்கள் அளித்த மானிய கோரிக்கை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சிறப்பான நடவடிக்கைகளால் கடந்த 13 வருடங்களாகக் கள்ளச்சாராய இறப்பு மாநிலத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்களது ஆட்சியில் எந்த உயிரிழப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனால் திமுக அமைச்சர் வேண்டுமென்றே எங்கள் ஆட்சியின் மீது குறைசொல்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்