Skip to main content

‘நான் தயார், அவர் தயாரா..?’ தங்க தமிழ்ச்செல்வனுக்கு சவால்விடும் OPS மகன்.. அ.தி.மு.க.வில் பரபரப்பு..!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

OPS son Jayapradeep  challenge Thangathamilchelvan ..

 

‘தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கேரளாவில் ரூ.2,000 கோடிக்கு சொத்து உள்ளதாக கூறும் தங்க தமிழ்செல்வன், அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கு கொடுக்கத் தயார். அவர் நிரூபிக்கத் தவறினால் அரசியலைவிட்டு விலகத் தயாரா?’ என ஓ.பி.எஸ். இளைய மகனான ஜெயபிரதீப், தமிழ்ச்செல்வனுக்கு சவால் விட்டுள்ளார்.

 

தி.மு.க. தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்செல்வன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரூ.2,000 கோடிக்கு கேரளாவில் சொத்து உள்ளதாக அம்மாநில பத்திரிக்கை செய்தி வெளியிட்டதை மேற்கோள் காட்டி குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் தான் சொல்லும் குற்றச்சாட்டு பொய் என்றால் ‘என் மீது வேண்டுமென்றால் வழக்குத் தொடரட்டும்’ என்றும் தெரிவித்தார்.
 


இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டிற்கு சவால்விடும் விதமாக ஓ.பி.எஸ்.-ன் இளைய மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எங்களுக்கு கேரளாவில் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம் என பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தமிழக மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதை இத்தோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

 

OPS son Jayapradeep  challenge Thangathamilchelvan ..
                                                    ஜெயபிரதீப்


எங்களுக்கு சொத்து இருப்பதாக கூறும் கேரள மாநிலத்திற்கு அவருடன் நான் வர தயாராக உள்ளேன். உண்மையாகவே நாங்கள் சொத்து சேர்த்துள்ளோம் என ஒரு சதுர அடி நிலம் இருக்கிறது என்று நிரூபித்தால்கூட நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு அவர் நிரூபிக்கத் தவறினால் இனிமேல் தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும். நான் தயாராக இருக்கிறேன் அவர் தயாராக இருக்கிறாரா’ என பதிவிட்டுள்ளார். இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Chief Minister MK Stalin campaign In Theni

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் இன்று (10.04.2024) மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர்.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தேனியில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உழவர் சந்தை பகுதியில் நடந்து சென்று வியாபாரிகளையும், வணிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.