Skip to main content

“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..!” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"OPS, Dinakaran who wanted to overthrow the AIADMK ..!" MK Stalin


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் நான்கு மாதத்தில் பழனிசாமியின் ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்ற முடிவோடுதான் வந்துள்ளீர்கள். நான் ரெடி, நீங்க ரெடியா” என பேசினார். மேலும், “வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் பிறந்துள்ளது. 

 

திருவெறும்பூரில் பேசிய முதல்வரை, எடப்பாடி என சொல்ல மாட்டேன். அந்த ஊரைச் சொல்லி, பேரைச் சொன்னால் எங்களுக்கு கேவலமாக உள்ளது என ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் பழனிசாமி என்றே அழைப்பேன். தமிழக முதல்வர் பிரச்சாரத்தில், நேரடியாக ஓட்டுப் போட்டு எந்த முதல்வரும் தேர்வு செய்ய முடியாது என பேசியுள்ளார். யாருமே நேரடியாக முதல்வராக முடியாது. ஆனால், பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பது அவருக்கே தெரியும். 

 

தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைக்கவில்லை. கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வர நாங்கள் விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரவே முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்தது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும்தான்; நாங்கள் அல்ல. 2005ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து கிடப்பில் போடப்பட்டது. மோடி அடிக்கல் நாட்டிய பிறகும் கிடப்பில்தான் உள்ளது. எய்ம்ஸ் வரவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என அ.தி.மு.க. அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் வரவில்லை; ராஜினாமா செய்தாரா? உதயக்குமார், ராஜினாமா செய்யத் தேவையில்லை. வரும் தேர்தலில் அவர், வீட்டுக்கு அனுப்பப்படுவார்” என்று பேசினார். 

 

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்ற வேண்டும் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “கால்வாய் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். 100 நாள் வேலை திட்டத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமென அறிவித்தவுடன், ஆளும் கட்சி அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது” என்றார்.

 

மேலும், “10 ஆண்டுகளாக ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் பின் பழனிச்சாமி பதவியேற்ற பின்பும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. திருமங்கலம் புதிய பேருந்து நிலையம், இரயில்வே மேம்பாலம், திருமங்கலம் பிரதான கால்வாய், மதுரை துணைக்கோள் நகரம் என எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை. இந்த தொகுதியின் அமைச்சர், ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார். ஆனால், ஜெயலலிதா எப்படி மரணமடைந்தார் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பியது துணை முதல்வர்தான்; தி.மு.க. அல்ல.

 

ஜெயலலிதாவுக்கும் தி.மு.க.வுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனையில் இருந்தபோது சரியான தகவல் வெளியிடவில்லை. விசாரனை கமிஷன் 8 முறை அழைத்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்லவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலவரம் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். கரோனா காலத்தில்கூட கொள்ளை அடிக்கக் கூடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம்” என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.