Skip to main content

“நூபுர் சர்மாவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்..” - திருமாவளவன்

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

"Nupur Sharma should be arrested." - Thirumavalavan

 

“நூபுர் சர்மாவோ பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 


பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசினார். இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபி பெருமானை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடைகளிலிருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. 


கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்துத் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், உலக அரங்கில் சகிப்புத்தன்மை அற்ற நாடு என்ற அவப்பெயரும், தலைக்குனிவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. 


அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அவர்களுடைய வேலைக்கெல்லாம் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் பாஜக நிர்வாகிகளின் வெறுப்புப் பேச்சே காரணம்.

 
அரபு நாடுகளில் எழுந்த எதிர்ப்பையொட்டி அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைப்பதாக பாஜக அறிவிப்பு செய்து இருக்கிறது. ஆனால் நூபுர் சர்மாவோ பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

 
இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பையோ, தலைகுனிவையோ நீக்குவதாக இல்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி, மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


இசுலாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பிவரும் சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.