Skip to main content

“அ.தி.மு.க.வின் அடையாளம் சசிகலா!” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Nellai Subramania Raja who removed from the AIADMK press meet


சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனைக்குள்ளாகி, நான்கு வருடச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லை சுப்பிரமணிய ராஜா, சுவரொட்டி அடித்தது பரப்பரப்பை உண்டாக்கியது. பரபரப்பு அடங்கும் முன்னரே, 'கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டார்' என சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. 

 

இந்நிலையில், "எத்தனையோ அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். கட்சியும் எங்கள் பக்கம் வரும். சசிகலா கர்நாடகாவை விட்டு தமிழ்நாட்டிற்கு வரும் நாளில், அதனை எதிர்பார்க்கலாம்" என அடுத்த பரபரப்பினை உருவாக்கியுள்ளார் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா.


அ.தி.மு.க. கட்சியின் சார்பு அணிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். மன்றத்தின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தவர் சுப்பிரமணிய ராஜா. கடந்த 1989ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பணியாற்றி வரும் இவர், சொத்துக்குவிப்பு வழக்கு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படங்களுடன் சசிகலாவின் படத்தினை பெரிதாகப்போட்டு, "அ.தி.மு.க.வை வழிநடத்த வருகை தரும் 'பொதுச் செயலாளர்' அவர்களே வருக.! வருக.!" என்கின்ற வாசகங்களுடன் சுவரொட்டியை நெல்லை சந்திப்பு பகுதி தொடங்கி மாநகரெங்கும் ஒட்டி அமர்க்களப் படுத்தினார். இது கட்சியின் தலைமைக்கு எரிச்சலூட்டிய நிலையில் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நெல்லை சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது கட்சித்தலைமை.

 

Nellai Subramania Raja who removed from the AIADMK press meet

 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜா, "சசிகலா விடுதலைக்காக வால் போஸ்டர் ஒட்டியதாக கட்சியில் இருந்து என்னை நீக்கியதாகக் கேள்விப்பட்டேன். அப்படி என்றால் ஏற்கனவே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கழக நிர்வாகி கோகுல இந்திரா ஆகியோர் இதற்கு முன்பு சசிகலாவிற்கு ஆதரவாகப் பேசி உள்ளார்கள்.  அவர்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் சசிகலா பக்கம் தான் இருக்கிறார்கள். சசிகலா கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும்போது இங்கு உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அவர் பின்னால் செல்வார்கள். சசிகலா மட்டும்தான் இந்தக் கட்சியையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் மீண்டும் கொண்டுவர முடியும். அவர்தான் அ.தி.மு.க.வின் அடையாளம். அவரை உதாசீனப்படுத்தினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் 75 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்" என்றார்.



ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த காலகட்டத்தில், இன்றைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அடுத்த முதல்வராகத் தகுதியுடையவர் சசிகலாவே.! இதனை வலியுறுத்தி 1008 பால்குடம் எடுத்து ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்துவோம்" எனத் தமிழ்நாட்டில் சசிகலாவிற்காக முதன்முதலாக வீர முழக்கமிட்டது இதே நெல்லையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள்: விவேக்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.