Skip to main content

கோவைசரளா நேர்காணல் செய்வதா? யாரை எங்கே வைப்பது என்று கமலுக்கு தெரியவில்லை! ம.நீ.மய்யத்திலிருந்து வெளியேறிய குமரவேல் குமுறல்

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.குமரவேல்  மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராகவும், கடலூர், நாகை பொறுப்பாளராகவும், இருந்தார்.  இவர், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறினார்.

 

n

 

மக்கள்  நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து அவர் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.   அப்போது அவர்,  ‘’கமல்ஹாசனின் நம்பகத்தன்மையை வைத்துதான் மக்கள் நீதி மய்யம்  கட்சி தொடங்கப்பட்டது.   மாற்று அரசியலை எதிர்பார்த்துதான் நான் அக்கட்சியில் சேர்ந்தேன்.  ஆனால், இங்கேயும் வழக்கமான அரசியல் என்றபோது அதிர்ச்சியாக இருந்தது.  இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைத்தபடியே   கடந்த ஒரு ஆண்டாக அக்கட்சியில் இருந்தபோது தேர்தல் வந்துவிட்டது.  

 

   மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதி்யில் நிற்க முதலில்  யாரும் முன்வராததால் நானே நிற்பதாகச்சொன்னேன்.   அதன்பின்னர்தான் இரண்டு பேர் விருப்பமனு கொடுத்தார்கள்.   கடலூர் தொகுதியில் நிற்பதற்காக நேர்காணலில் பங்கேற்றேன்.  கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த நடிகை கோவைசரளா நேர்காணல் செய்தார்.   கோவை சரளா எல்லாம்  உன்னை நேர்காணல் செய்தவற்கா நீ அரசியிலுக்கு சென்றாய் என்று என் மனைவி என்னை கடிந்துகொண்டார்.  கோவைசரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   கோவைசரளா நல்ல நடிகையாக இருக்கலாம். அதற்காக யாரை எங்கே வைப்பது என்று கமல்சாருக்கு தெரியவில்லை.  இதுமட்டுமல்ல,  கட்சியில் சிலர்  எடுக்கும் முடிவுகளுக்குத்தான் கமல்சார்  தலையசைக்கிறார்.  

 

k

 

நேர்காணலுக்கு பின்னர் நான் தான் வேட்பாளர் என்று முடிவானபோது, கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்த மகேந்திரன் என்னிடம் கூறியதால்,  நான் கடலூரில் கிரவுண்ட் வொர்க் ஆரம்பித்தேன்.  முதற்கட்டமாக நான் முகநூலில்,  கடலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தாருங்கள்..என்று பதிவிட்டேன்.  நேர்காணல் முழுவதுமாக முடிந்து வேட்பாளர்களை தலைமை அறிவிப்பதற்கு முன்பாகவே இப்படிச்செய்ததால் இது தவறு என்று கூறினார்கள்.  நானும்  இது சம்பந்தமாக கமல்சாரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.  என்னால் கட்சிக்கு பிரச்சனை என்றால் நான் வேட்பாளராக நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

 

n

 

தொகுதியில் என் வேகத்தை காட்டவேண்டும் என்றுதான் முகநூலில் பதிவிட்டேன்.   பொதுவாக புதுசாக ஆரம்பிக்கும் கம்பெனிதான்  எனர்ஜியுடன் வேகத்தை காட்டும்.  பழைய கம்பெனிதான் யானை மாதிரி நடப்பாங்க.  ஆனால், பழைய கட்சியெல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள்.  இன்னும் மக்கள் நீதி மய்யம்தான் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. 

 

எந்த இடத்தில்  மெதுவாக செல்லவேண்டும் எந்த இடத்தில் வேகமாக செல்லவேண்டும் என்று கமல்சாருக்கு அட்வைஸ் கொடுப்பவர்கள் சரியாக இல்லை.  அவர்கள்  சொல்லுவதை வைத்து முடிவெடுப்பதால் கமல்சாரின் நடவடிக்கைகளும் தவறாக இருக்கிறது.  இது கட்சிக்கே பலவீனமாக அமைகிறது.  

 

நான்  நேர்காணலில் பங்கேற்றது உண்மை. ஆனால், நான் பங்கேற்கவில்லை என்று கட்சி கூறுகிறது.  உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற கேள்வியை கேட்டார் கோவைசரளா.  அவரால் அதற்கு மேல் நேர்காணலில் எந்த அறிவுப்பூர்மான கேள்வியையும் கேட்க முடியாது.    

 

n

 

கடந்த ஒருவருடமாக கட்சியில் இருந்தும் தலைவர் கமல்சார் செல்போன் நம்பர் எனக்கு தெரியாது.  கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள சிலருக்குத்தான் தெரியும்.  என்னால் நேரடியாக கமல்சாரை தொடர்புகொள்ள முடியாது.   இதுதான் மற்ற அரசியல் கட்சியில் இருக்கு.  அப்புறம் எப்படி மக்கள் நீதிமய்யத்தை மாற்று அரசியல் என்று சொல்வது?’’என்று தெரிவித்தார்.

 

m


முன்னதாக குமரவேல் விலகல் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘’சமூக வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் கடலூர் பாராளூமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார்.  மக்கள் நீதி மய்யம் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது.  ஜனநாயக முறைப்படி வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு , நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், பல நூறு வேட்பாளர்கள் நேர்காணலுக்கு காத்திருகின்ற சூழலில் நேர்காணலுக்கு கூட வராமல்  தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக குமரவேல் அறிவித்திருப்பது  கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் இல்லை.  இந்த நிலையில் அவரே ராஜினாமா செய்திருக்கிறார்.  அவரின் ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்றுக்கொள்கிறது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார். 

Next Story

“இனி ஏதாவது பேசினால் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்” - இபிஎஸ்ஸுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
makkal neethi mayyam  condemns EPS If we talk about anything, we will not leave the rails on the rails"

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை.” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கமல்ஹாசனை நான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவில் எம்.பி.ஆக கமல்ஹாசன் முயற்சிக்கிறார். பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். எனவே, அவருடைய கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை” என்று கூறினார். 

இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் கமல்ஹாசனை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

தமிழக முதல்வரும், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத, யாரையும் விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர், தன்னலமின்றிப் பணிபுரிவோரை குறைகூறுவதை பொதுமக்கள் மட்டுமல்ல, அவருடைய கட்சியினரே ஏற்கமாட்டார்கள்.

2015-ம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, தமிழகத்தை ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார், எந்த நிலைமையில் இருக்கிறார் என்றே மக்களுக்குத் தெரியாத நிலை இருந்தது. அப்போதும் இவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போதும் மக்களுடன் இல்லை.

பதவி, அதிகாரத்தைத் தக்கவைக்கவும், சிறைப் பறவையாகாமல் இருப்பதற்காகவும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையானார். வாழ்வு அளித்தவருக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை பச்சோந்தி என்று விமர்சித்தால், பச்சோந்திக்குத்தான் அவமானம். உயிர்ச்சூழலில் பச்சோந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த முக்கியத்துவமும் கிடையாது. எனவே, தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கடுமையாக எச்சரிக்கிறோம். இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.