Skip to main content

“நட்டாவின் பொய் குற்றச்சாட்டு புறப்பட்ட இடத்திலேயே வீழ்ந்துவிட்டது..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"Natta's false accusation fell..." - R.S. Bharti

 

திருப்பூரில் கடந்த 24ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டார். அதில் அவர், “குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மிகத் தெளிவான உண்மையைச் சொல்கிறேன்” என்று பேசியிருந்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பதிலளித்துள்ளார். 

 

அவர் தெரிவித்திருப்பதாவது, “பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று ‘திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்ப்பதை திசை திருப்பி, எங்கே நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து குறை கூறுவது வியப்பளிக்கிறது.

 

பல வாரிசுகளை உருவாக்கி, அவர்களை சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி, நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்துவரும் பாஜக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி ‘வாரிசு அரசியல்’ என்று கூறுவது வெட்கக்கேடானது. பாவம் அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்.

 

பத்தாண்டு காலம் அரசு நிர்வாகத்தைப் பாழ்படுத்தி, ஊழல், நிர்வாக சீர்கேடு என தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அதிமுகவை அருகில் வைத்துக்கொண்டு ‘நிர்வாகம்’ குறித்து திமுகவிற்கு பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா. திமுக ஆட்சி இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம்தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாட்டு மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும். பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் ‘நிர்வாக சீர்கேடு’ குற்றச்சாட்டு எத்தகையது என்பதற்கு நாம் பதில் சொல்வதைவிட, இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2ஆம் பக்கத்தில் அவருடைய செய்தியைப் பிரசுரித்து அதிலேயே ‘நிர்வாக சீர்கேடு என்பதற்கு நட்டா எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை’ என்று முன்னுரை கொடுத்து பிரசுரித்துள்ளது. நட்டாவின் பொய்க் குற்றச்சாட்டு புறப்பட்ட இடத்திலேயே வீழ்ந்துவிட்டது. அவரது பேச்சுக்கு ஆதாரம் இல்லை என அந்த ஆங்கில பத்திரிகையே பட்டவர்த்தனமாக கூறிவிட்டது.

 

மழை வெள்ள சேதங்களை தினமும் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கி, பணிகளை முடுக்கிவிட்டது நமது முதலமைச்சர் மட்டுமே. அப்படியொரு முதலமைச்சர் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்துவிட்டது வேதனையளிக்கிறது. ஆகவே நல்லாட்சி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று பணியாற்றும் முதலமைச்சரைக் கொண்ட திமுக ஆட்சியைப் பார்த்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கம் தொட்டே திமுகவின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அரசியல் விழாக்களுக்கு வரும்போது ‘பொய் மூட்டைகளை’ அவிழ்த்துக் கொட்டுவதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்