![nagai district admk leader and cm of tamilnadu edappadi palaniswami election campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/JrD3hMFaAuPGCSW1kqhS5RBRZxOvRWrVZCa0HDF2giY/1616093370/sites/default/files/inline-images/cm1232.jpg)
சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை திருத்துறைப்பூண்டியிலிருந்து துவங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு வாக்குச் சேகரித்தவர், அங்கிருந்து வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தார். பிறகு, அங்கிருந்து நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு வந்தார். அங்கு முதல்வரின் பிரச்சாரத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார் அ.தி.மு.க. வேட்பாளரான தங்க.கதிரவன்.
அங்கு பிரச்சாரத்தைத் துவங்கியவர் வழக்கம்போல் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார். எடப்பாடி அவுரி திடலுக்குள் வந்ததுமே அருகில் இருந்த கட்டிடத்தில் வரிசையாக நின்றிருந்த இளைஞர்கள், "எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க! எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு!" என்று எழுதிய பதாகைகளை உயர்த்தியும், ஆக்ரோஷமாகக் குரலை உயர்த்தியும் முழக்கமிட, இதைச் சற்றும் எதிர்ப்பார்த்திடாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது நம்ம பிரச்சார லிஸ்ட்லயே இல்லயப்பா, என்பது போல முகமலர்ச்சியோடு அதனைக் கவனித்தார்.
![nagai district admk leader and cm of tamilnadu edappadi palaniswami election campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/Aby3yyKm5jGkBqV-iOTz76-VrQ1SZ9xbxEF_A4wxZBo/1616093382/sites/default/files/inline-images/admk12322.jpg)
இது குறித்து அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தோம், "நாகப்பட்டினம் தொகுதியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தனக்கு எப்படியும் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஆறு மாதத்திற்கு முன்பிலிருந்தே தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். தற்போதைய வேட்பாளரான தங்க.கதிரவன். படித்த இளைஞர்களை ஒவ்வொரு கிராமத்திலும் தேர்வு செய்து ஐ.டி.விங்போல அமைத்து, ஏரியா முழுவதும் பல வேலைகளை முடித்து விட்டார். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸோ இன்னும் பணிகளையே துவங்காத நிலையில், அவர் கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டார். எடப்பாடிக்கு இப்படியொரு அட்டையைக் காட்டியதே அவர் உருவாக்கி வைத்துள்ள டீம் இளைஞர்கள் தான். தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்" என்கிறார்கள்.
![nagai district admk leader and cm of tamilnadu edappadi palaniswami election campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yab43fC_U2UaooVz44Cn0Zw5_Xd4KsR6uf2UNFJxCtE/1616093392/sites/default/files/inline-images/cm1232211.jpg)
இஸ்லாமியர்களுக்கான வாக்குகள் அதிகமாக இருக்கும் இந்த தொகுதியில், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., தி.மு.க.வின் வாக்குப் பெருவாரியாக இருப்பது வி.சி.க. வேட்பாளருக்கான பெரும்பலம், அதே வேலையில் தி.மு.க. சின்னம் போட்டியிடவில்லை, சொந்த தொகுதியைச் சேர்ந்த வேட்பாளராக வி.சி.க. வேட்பாளர் இல்லை என்பது வி.சி.க.வின் பலவீனம். அதேபோல மீனவர்களின் வாக்குகளும், அ.தி.மு.க.வினரின் வாக்கு வங்கியும் கணிசமாக இருப்பதும், உள்ளூர்க் காரர் என்பதும் அ.தி.மு.க. வேட்பாளருக்கான பலம். இருப்பினும் கடுமையான போட்டியாகவே இருக்கும்.