Skip to main content

தி.மு.க. நடத்திய பல கொடிய குற்றங்கள்! முதலமைச்சர் எங்கே முரண்பாடாகப் பேசினார்? -பட்டியலிட்டுச் சாடும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

K. T. Rajenthra Bhalaji

 

‘ஒரு காவல் நிலையத்தைக்கூட நிர்வகிக்க முடியாமல், உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்..’ என, சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைகள் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

‘அ.தி.மு.க.-வின் புனிதத்தை, தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால், ஒருபோதும் பாழ்படுத்த முடியாது’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ - 

 

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை மகன் இருவரது உயிரிழப்புசம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் செயல்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினர், முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்திருக்கிறார்கள்.


குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு, விரிவான, விரைவான விசாரணையை தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதனை, சாத்தான்குளம் பகுதிவாழ் மக்கள், மனதார வரவேற்றுள்ளனர். சில இடங்களில் இளைஞர்களும், பொதுமக்களும்  உணர்ச்சிப் பெருக்கில் பட்டாசுகளை வெடித்துத் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுப் பாராட்டியிருக்கின்றனர். ஆனால், இவையாவிற்கும் நேர்எதிராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.

 

முதலமைச்சர், ஜுன் மாதம் 24-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 22-ஆம் தேதி இரவு, பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் என்றும், பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் பென்னிக்சின் தந்தை திரு. ஜெயராஜ், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்றும், சிகிச்சையில் இருந்த ஜெயராஜ் 23.6.2020 அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் அவ்வறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து (அதாவது 24.6.2020 அன்று) இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்றும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வழக்குக் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்து, அதன் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26.6.2020 க்கு ஒத்தி வைத்தனர் என்றும்,  அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் அவர்களின் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். 


எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே,  அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளைச் சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களைத் திரட்டுவது, பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான், ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.

 

அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே, அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி  செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான்,  சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் கனிவுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்கள். மேலும் இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தருவோம் என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக, இவ்வழக்குக் கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில், மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும், முதலமைச்சர்  தெளிவுபடுத்தியுள்ளார். 


இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் முரண்பாடாகப் பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? ஸ்டாலின், இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுகிறது. அதற்கு பக்கபலமாக, தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்கிட, தி.மு.க. திட்டமிட்டு மலிவான அரசியலைச் செய்து வருகிறது. அதேவேளையில், தி.மு.க.-வாலும், அக்கட்சியினராலும் நடத்தப்பட்ட நெஞ்சம் பதறுகிற பல கொடிய குற்றங்கள் மற்றும் அது தொடர்பான வழக்குகளில் மட்டும் தி.மு.க. வாய்த் திறந்து பேசாத பாறாங்கற்களாகிப் போவது பரிதாபத்திற்குரியது.


உதாரணமாக, தி.மு.க. மகளிரணி பிரமுகர் பால் மலரின் படுகொலை, படுகொலை செய்யப்பட்ட தா. கிருட்டிணனின் வழக்கு, அண்ணாநகர் ரமேஷின் ஒட்டுமொத்த குடும்பமும் மர்மமாகச் செத்துப்போனது, பெரம்பலூர் சாதிக்பாட்ஷாவின் மர்ம மரணம் போன்றவற்றில் மட்டும் தி.மு.க.-வும், அதன் தலைமையும் பேச மறுப்பதும், வாய்மூடி மௌனியாய் இருப்பதும், அவ்வழக்குகளுக்கான நீதி நீர்த்துப்போக வேண்டும் என்று வியர்த்துப்போகும் அளவுக்கு விழிப்பதும் ஏன்? என்று ஸ்டாலின் விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாட்சிமைமிக்க நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் கொண்டு செல்லப்படும் வழக்கின் மீது அவதூறு விதைப்பதென்பது, மகுடத்தின் மீது வெறிபிடித்து அலைகிற ஒரு மனநோயாளியின் காரியமே. எனவே இனியும் தி.மு.க., மரணங்களை முன்வைத்து, தந்திர அரசியலையும், தரங்கெட்ட போக்கையும் தொடருமேயானால், அக்கட்சி விரைவில் மக்களால் மயானத்திற்கு அனுப்பப்படும் என்பது நிச்சயம். 

 

அன்றைய தி.மு.க. ஆட்சியில், சென்னையின் இதய பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில், உணவு விடுதி ஒன்றில் ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொன்னதற்காக, துப்பாக்கி எடுத்து ஓட்டல் ஊழியர்களைச் சுட்டவர், அதிகாரம் தாங்கி இருந்தவரின் அடர்த்தியான உறவினர் என்பதற்காக, ஒரு மூத்த காவல்துறை அதிகாரியையே சம்பவ இடத்திற்கு அனுப்பி, தடயங்களை அழித்ததோடு, அச்சம்பவத்தில் தப்பிப் பிழைத்த வடநாட்டு ஊழியர்களை மிரட்டி, வடநாட்டுக்கே வழியனுப்பி வைத்தவர்கள் யார் என்பதை இந்த உலகமும், உலக மக்களும் நன்கு அறிவார்கள். எனவே, தான் 'திருடி பிறரை நம்பாள்' என்னும் கதையாக, புரளி விதைப்பதும், புலனாய்வு புலிகள் போல தங்களை நினைத்துக்கொண்டு புளுகு மூட்டைகளை விதைப்பதும் ஆக்கம் அற்ற செயலாகும். அறம் கெட்ட அரசியலாகும்.

 

http://onelink.to/nknapp

 

அனைத்திந்திய அண்ணா தி.மு.க.,  ஆன்மீக நெறிகொண்டு நடைபோடுகின்ற அன்பியல் இயக்கம். நேர்மை, அறம், நியாயத்தின்பால் நடக்கின்ற புனித இயக்கம். இதன் புனிதத்தைத் தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால் ஒருபோதும் பாழ்படுத்த முடியாது. எதுவரினும் எதிர்கொண்டு, எந்நிலையிலும் புண்ணியத்தின் வழியிலிருந்து பிறழாது, சட்டத்தின் வழியில், தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்துகிற எங்கள் எளிமையான சாமானிய முதல்வர், எடப்பாடியாரின் நல்லாட்சியினை நரி சூழ்ச்சிகளால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது'' எனக் கூறியுள்ளார். 

 

‘சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்‘ என்று, தமிழகமே கொந்தளித்துக் கிடக்கும் நிலையில், தி.மு.க.-வும், அ.தி.மு.க.-வும், ஒருவர் மீது ஒருவர், மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.