Skip to main content

கரூர் தொகுதியில் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்(படங்கள்)

Published on 04/04/2024 | Edited on 04/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “பெற்றோர்களின் எண்ணம் அறிந்து வெறும் வயிற்றில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிற குழந்தைகளுக்கு முதலமைச்சர் தரமான காலை உணவு திட்டத்தை அளித்திருக்கிறார் நமது முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக நமது மாநிலத்தில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 34,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயன்படுத்துகின்றனர்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் தகுதி படைத்த மகளிர் இன்று ரூபாய் 1000 தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த 8 மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கரூரில் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இன்னும் சில மகளிருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு முழுமையாக வழங்கப்படும்

மோடி அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்லப் பெயர் 29 பைசா, நாம் சரியாக ஒரு ரூபாய் கட்டுகின்றோம் அவர் நமக்கு தருகின்றது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. 10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற முதல்வர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு  வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்  எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல், அந்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால் தமிழகத்தில் இன்னும் வரவில்லை.

மோடியின் குடும்பம் இடி, சிபிஐ,  ஐடி, அதானி ஆகியோர் தான். மோடியின் குடும்பம் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளையும் அதானி கையில் கொடுத்து விட்டது. உலக பணக்கார வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அதானி ஏர்போர்ட், அதானி ரயில்வே ஸ்டேஷன், அதானி துறைமுகம், அதானி மின்சாரம் ஆகிய அனைத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டார். மோடிக்கு வர வேண்டிய கோபம், பாதம் தாங்கி பழனிசாமிக்கு வருகிறது. மேலும் நேற்று கரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் படம் காமித்தாராம், பாதம் தாங்கி பழனிச்சாமி அவர்களே என்ன படம் போட்டு காட்டினாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள் உங்களுடைய ரீல் அந்து போய் பல வருடங்கள் ஆகிறது என்றார்.

இன்னும் பல்வேறு சாதனைகளை கூறி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

சார்ந்த செய்திகள்