Skip to main content

பாலில் ஜவ்வரிசி, குளுக்கோஸ் கலப்படம்!!! ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்... -பால் முகவர்கள் சங்கம்

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
minister rajendra balaji

 

ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் பால்வளத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்வதோடு, ஆவின் அதிகாரிகள், ஊழியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆவின் பாலகத்தில் தொடர்ந்து தண்ணீர் கலந்த பாலினை விற்பனை செய்ததாக நேற்று (24.06.2020) 8 பேர் கைது செய்யப்பட்டு, 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

 

ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் துணையோடு இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தரமான பாலினை வழங்க வேண்டிய அதிகாரிகள் துணையோடு இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது.

 

அதிலும் ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் தரமற்ற பாலினை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த பாலை திருட்டுத்தனமாக விற்பனை செய்து விட்டு அதற்கு ஈடாக தண்ணீர், சோயா பவுடர், ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றை கலப்படம் செய்து ஈடுகட்டுவது, அதற்கு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரை ஆதரவு இருப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.

 

மேலும் ஏற்கனவே மதுரை ஒன்றியம், நெல்லை ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன் காரணமாக பல லட்ச ரூபாய் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட முறைகேடுகள் காரணமாக பல கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது.

 

எனவே இந்நிலை மாறிடவும், ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை களைந்திடவும் வேண்டுமானால், பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

 

ஆவின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், பால் குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். ஓராண்டுக்கு மேல் எந்த ஒரு அதிகாரியும், ஊழியரும் ஆவின் நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே ஆவின் நிர்வாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்திட முடியும்.

 

ஆவின் பால் தரமான பால், தாய்ப்பாலுக்கு நிகரான பால் என விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. அதற்கான உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடர் கனமழை; தயார் நிலையில் ஆவின் நிர்வாகம்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Continuous heavy rain Management of Aavin readiness

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) மாலை 5 மணி அளவில் சேலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம் போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Continuous heavy rain Management of Aavin readiness

ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.