Minister Palanivel Thiagarajan  Explanation by Why did meet the Prime Minister?

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Advertisment

இதனிடையே, கடந்த 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அன்று மதுரையில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். அதன் பிறகு, இரவு 8 மணிக்கு மேல், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, மதுரையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது, தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை சந்தித்தாக தகவல் வெளியானது. மேலும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (05-03-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

இதனை தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடிக்கும், எனக்கும் தனி உறவு உள்ளது போல் போலி செய்தியை பரப்பி வருகின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய பொறுப்பில் பிரதமர் இருக்கிறார். அதனால், அவரை வரவேற்கவும், வழி அனுப்புவதும் நமது அரசாங்கத்தின் வேலை. அதன் அடிப்படையில், தமிழக முதல்வர், பிரதமர் மோடியை வரவேற்கும் பணியை எனக்கு வழங்கினார். அதைதான் நான் செய்தேன். அரசாங்க பணியின் காரணமாகவே பிரதமரை சந்தித்தேன். தனிப்பட்ட விருப்பத்திற்கோ, அரசியலுக்கோ அல்ல” என்று கூறினார்.