Skip to main content

“இனியும் அக்கா, தம்பியாக பயணிப்போம்...” - திருச்சி சூர்யா, டெய்சி பேட்டி

Published on 24/11/2022 | Edited on 25/11/2022

 

Let's travel as sister and brother'-Trichy Surya, Daisy interview

 

பா.ஜ.க.வின் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க. பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது அக்காவிற்கும் தம்பிக்கும் இடையே நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் என இருவரும் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தது பேசு பொருளாகியிருக்கிறது.

 

பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு திருச்சி சூர்யா வந்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டெய்சி சரணுக்கு போன் போட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அந்த ஆடியோ லீக்கான விவகாரம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

 

அந்த வீடியோவில் திருச்சி சூர்யா, அந்தப் பெண் நிர்வாகியை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசுகிறார். அந்தப் பெண் நிர்வாகி எவ்வளவு கேட்டுக்கொண்டும் அவரது நடத்தை குறித்தும் அவர் பா.ஜ.க.வில் பதவி பெற்றது குறித்தும் இழிவுபடுத்துவதோடு, பா.ஜ.க.வின் கேசவ விநாயகம் குறித்தும் மிகவும் மோசமாகப் பேசுகிறார். டெய்சியை அறுத்து விடுவேனென்றும், கொன்று விடுவேனென்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பென்றும் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.

 

டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்துமே ஆடியோவாக வெளியே வர, சமூக வலைத்தளங்களில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவிட்டனர். அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

 

பா.ஜ.க. நிர்வாகியான காயத்ரி ரகுராம், ஏற்கெனவே அண்ணாமலை மீது முட்டல் மோதலிலிருந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை இல்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து, பிரச்சனைக்குரியவர்களை விட்டுவிட்டுக் கேள்வியெழுப்பிய காயத்ரி ரகுராமின் பதவிகளை அடுத்த 6 மாத காலத்துக்குப் பறித்துவிட்டார் அண்ணாமலை.

 

ஆடியோ விவகாரத்தில் பெண் நிர்வாகிக்கு எதிராக சூர்யாவின் மோசமான கொலை மிரட்டல் பேச்சுக்கள் அப்பட்டமாகத் தெரிந்தும் கூட அவர்மீது காவல்துறையில் புகாரளிக்காத முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகக் கமிட்டி அமைப்பதாகவும் ஒரு வாரக் காலத்தில் விசாரணை முடிவு வந்ததும் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

bjp

 

என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இன்று பிரச்னைக்குரிய திருச்சி சூர்யாவும்,டெய்சி சரணும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்பொழுது பேசிய டெய்சி சரண், ''சமீபத்தில் நடந்த ஆடியோ கிளிப்பிங்ஸ் வலைத்தளத்தில் வைரலாகி எல்லா ஊடகங்களிலும் பரவி வருகிறது. பாஜக கட்சியில் இப்படி நடந்ததா? என்பது போல் பரவி வருகிறது. இந்தக் கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு மிகப்பெரிய இடத்திற்குச் சென்றுள்ளனர். இதுவரைக்கும் அம்மா, அக்கா என்பதைத் தவிர பெண்களை வேறெப்படியும் கூப்பிடுவதில்லை. அப்படி ஒரு கட்சி பாஜக. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் லட்டு கிடைத்த மாதிரி ரொம்ப நிறைய ட்ரோல் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நாங்கள், குறிப்பாக கனக சபாபதி ஐயா கூப்பிட்டு பேசி என்னையும் சிவா அவர்களையும் பேச வைத்தார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி இந்த விஷயத்தை விட்டு விடலாம் என்று முடிவுக்கு வந்து விட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. என்னைப் பொருத்தவரை எனது இறப்புக்கு முன்பாக இந்தியா இப்படி ஒரு பிரதமரை பார்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு பிரதமர் வந்து இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் .ஏதோ கண் பட்ட மாதிரி இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது. உணர்ச்சி வசப்பட்டு எப்படியோ நிகழ்ந்து விட்டது. இதை நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இதில் மனமொத்து அவர் ஆரம்பத்தில் அக்கா என்றுதான் கூப்பிட்டார். நானும் தம்பி என்றுதான் பேசினேன். திரும்பவும் தொடர்ந்து அக்கா தம்பியாக பயணிப்பதாக முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

 

அதன் பிறகு பேசிய திருச்சி சூர்யா, ''அக்கா சொன்ன மாதிரி தனிப்பட்ட இருவருக்குமான உரையாடல். அதில் எங்கள் மாநில தலைவர் சொன்ன மாதிரி தனிப்பட்ட முறையில் இருந்தாலும் சரி, பொதுத் தளத்தில் இருந்தாலும் சரி கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னார். இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சந்திக்கச் சொன்னார்கள். சபாபதி அவர்கள் தலைமையில் நடந்த குழுவில் இருதரப்பும் பங்கு கொண்டு பேசினோம். எந்த மாதிரியான சூழ்நிலையில் வாக்குவாதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் பேசினோம். இதை எழுத்துப் பூர்வமாகவும் நேரடியாகவும் கொடுத்திருக்கிறோம். அக்காவுடைய தரப்பிலிருந்தும் இந்த ஆடியோ போகல. நானும் வெளியேயும் கொடுக்கல. இது வேறு வகையில் வெளியே சென்றுள்ளது. யார் என்பதைக் கட்சி கண்டுபிடிக்கட்டும். கட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வைப்பது என்னுடைய எண்ணம் இல்லை என அக்கா சொன்னாங்க. நானும் என்னுடைய விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறேன். கட்சி ஒருவேளை நான் பேசியது தவறு என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன்'' என்றார்.

 

இந்நிலையில் பாஜக ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யாவை 6 மாதம் கட்சியின் அனைத்துப் பதவியிலிருந்தும் நீக்கி பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது