Skip to main content

கே.கே.எஸ்.எஸ்.ஆரோடு கே.டி.ராஜேந்திரபாலாஜி மோதவேண்டும்! - ஜெயலலிதா பாணி அரசியலைக் கையிலெடுப்பாரா எடப்பாடி? 

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

KKSSR, thangam thennarasu DMK and Rajendrabalaji ADMK

 

‘என்னைக் குறை கூறி ‘ஒன்று’ சொன்னால், பதிலுக்கு நான் ‘பத்து’ சொல்வேன்’ என்ற ‘கொள்கை’ உடையவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அமைச்சர் என்ற முறையில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறதென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ‘உதாரணம்’ காட்டி விமர்சித்ததோடு, ’வாழ்நாள் முழுவதும் ராஜேந்திரபாலாஜி சிறையில் இருக்கவேண்டும்.’ என்று  ‘தமிழகம் மீட்போம்!’ உரையில் விளாசிவிட்டார்.  

  

ஏற்கனவே, எடப்பாடியால் ஸ்டாலினுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடப்பட்ட ராஜேந்திரபாலாஜி, தன்னைக் குறிவைத்து ஸ்டாலின் குற்றம் சாட்டியதால், திமுகவையும், அதன் தலைவர்களையும், கேலியும் கிண்டலுமாக, வரைமுறை இல்லாமல் வறுத்தெடுத்துவிட்டு, ‘கம்ப்யூட்டர் ரூம் அரசியலை தூக்கியெறிந்துவிட்டு, எங்க ஊருக்குப் வந்து பேச முடியுமா?’ என்று சவால் விட்டார்.  

 

KKSSR, thangam thennarasu DMK and Rajendrabalaji ADMK


எதிர்ப்பில் ஆவேசம் இல்லை!


‘எங்களின் தளபதியை தரக்குறைவாகப் பேசிய ராஜேந்திரபாலாஜி, இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் பண்ண முடியாது.’ என்று இம்மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் கூட்டாகப் பேட்டியளித்தாலும், ‘அத்தனை காரசாரமாக இல்லை’ என்று கொந்தளிக்கின்றனர் உ.பி.க்கள். 

 

KKSSR, thangam thennarasu DMK and Rajendrabalaji ADMK


தமிழகத்தில் பல இடங்களிலும் ‘ரத்தம் கொதிக்கிறது’ என்று சிலிர்த்த சில திமுகவினர்,  ராஜேந்திரபாலாஜியை நாரச நடையில் திட்டிய வீடியோவை, யூ டியூபில் வெளியிட்டு திருப்தி அடைய, ‘இதெல்லாம் போதாது..’ என்று, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரனின் மகன் ஒருவர், “இப்பவே 50 பைக்குகளில் இளைஞர்களைத் திரட்டி ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்குப் போவோம்..” என்று அடிமட்டத் தொண்டர்களிடம் கலந்தாலோசித்த போது, “அதெல்லாம் சரியா வராது. நாம பிரச்சனை பண்ணி, அது பெரிசாயிட்டா, பின்னாளில் கட்சி நம்மைக் காப்பாத்தாது. வேணும்னா.. இந்தப் பக்கம் ராஜேந்திரபாலாஜி வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்.” எனப் பேசி சமாதானமாகிவிட்டனர். அதன்பிறகு, ‘மந்திரி புண்ணியத்துல இவரு ஒவ்வொரு பாருக்கும் போயி மாமூல் வாங்குறாரு. அப்புறம் எப்படி மந்திரிய எதிர்ப்பாரு? நம்மகிட்டயே சீன் போடறாரு..’ என்று மாவீரன் மகன் குறித்து கமெண்ட் அடித்துச் சிரித்திருக்கின்றனர்.     

தி.மு.க தொண்டர்களின் மனக்குறை என்னவென்றால், ‘ஸ்டாலினை விமர்சித்தபோது ராஜேந்திரபாலாஜியின் குரல் நாபிக்கமலத்தில் இருந்து ஆவேசமாக வெளிப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கிறோம் என்று பேட்டியளித்த கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் சுரத்தே இல்லாமல், கம்மிய குரலில் அல்லவா பேசினார்கள்? அப்போது, தங்கம் தென்னரசாவது நேரடியாக ராஜேந்திரபாலாஜியை தாக்கிப் பேசினார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். பட்டும் படாமலும் தடவிக்கொடுத்தது போல் பொத்தாம் பொதுவாக அல்லவா பேசினார்? இவர்களின் ‘அன்டர்ஸ்டேன்டிங் பாலிடிக்ஸ்’ எங்களுக்குத் தெரியாதா? இருக்கன்குடி பக்கம் திமுக எம்.பி.யால் மணல் குவாரி ஓட்ட முடிகிறதென்றால், அமைச்சரின் ஆசி இல்லாமலா இருக்கும்? மாவட்டத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆளும்கட்சியோடு ஒத்துப்போகும்போது, தொண்டர்கள் நாம் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு ஒன்றும் பண்ணிவிட முடியாது.’ என்பதுதான். 


அடக்கி வாசிக்கும் அமைச்சர்களின் சுயநலம்!

 

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்களோ, வேறு விதமாக ‘ரியாக்ட்’ பண்ணுகின்றனர். “தமிழக அமைச்சர்களில், ஜாதிப் பின்புலம் உள்ளவர்கள், வீரன் சூரனென்று சொல்லிக்கொள்பவர்கள் யாரேனும், திமுகவையோ, ஸ்டாலினையோ நேரடியாக தாக்கிப் பேசுகிறார்களா? எல்லாருக்குமே பயம். ‘அடுத்து தி.மு.க ஆட்சிதான்! ஸ்டாலின்தான் முதல்வர்!’ என்ற நிஜநிலவரம் அறிந்து பம்முகின்றனர். ‘ஆயிரமாயிரம் கோடிகளைச் சம்பாதித்துவிட்டோம். திமுகவை பகைத்துக்கொண்டு வழக்கு, சிறை என்று சிக்கிவிடக்கூடாது’ என்ற சுயநலத்தின் காரணமாகவே, அவர்கள் திமுகவுக்கு எதிராகச் சத்தமாக வாய் திறப்பதில்லை. 


ஸ்டாலினுக்கு எதிராக ராஜேந்திரபாலாஜி மட்டும் ஏன் அனல் கக்குகிறார்? எம்.ஜி.ஆரை போலவே, சாகும் வரையிலும் கலைஞரையும் திமுகவையும் முழுமூச்சாக எதிர்த்தவர் ஜெயலலிதா. இரட்டை இலை அபிமானிகளின் கோபதாபங்களும் திமுகவுக்கு எதிரானதுதான். அதனால்தான், ராஜேந்திரபாலாஜியின் ஆவேசப் பேட்டியை, அ.தி.மு.க ஐ.டி. விங் மூலம், ஒரு பிரச்சாரமாகவே பரப்பி வருகின்றனர். ஸ்டாலினோடு மோதவிட்டு ராஜேந்திரபாலாஜியை எப்படியும் பலிகடா ஆக்கிவிடுவார் எடப்பாடி.” என ‘உச்’ கொட்டுகின்றனர். 


இவரைப்போல எவருமில்லை! 

 

ராஜேந்திரபாலாஜி விசுவாசிகளோ “தொண்டர்களைச் சோர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், தலைவர்களின் பேச்சும் செயலும் தொண்டர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அவர் வெளிப்படையானவர். மதரீதியிலான கருத்து ஒன்றைச் சொன்னால், தனது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதை அறியாதவரல்ல.

 

cnc

 

ஆனாலும், தன் மனதுக்குத் தோன்றியதைப் பேசினார். ‘விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பார்கள். ராஜேந்திரபாலாஜியை டம்மியாக்கிவிடுவார்கள்.’ என்று இப்போதும் பேசத்தான் செய்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்துவிட்டார்.  பறிபோன மாவட்டச் செயலாளர் பொறுப்பை, தனக்கே தலைமை மீண்டும் தரவேண்டும் என்ற பரிதவிப்பெல்லாம் அவருக்கு இல்லை. 


வரும் தேர்தலில், எம்.எல்.ஏ. சீட் தரவில்லையென்றாலும் கூட, அவர் அலட்டிக்கொள்ள மாட்டார். அவருடைய தற்போதைய நாட்டமெல்லாம் ஆன்மிகமும் மக்கள் சேவையும்தான். பணத்தைப் பணமென்று பார்க்காமல், ராஜேந்திரபாலாஜி அளவுக்கு, நலிந்தோருக்கு லட்சம் லட்சமாக அள்ளித்தரும் அரசியல் தலைவர்கள், தமிழகத்தில் எங்களுக்குத் தெரிந்து யாருமில்லை. எந்த அரசியல் தலைவர் வீட்டிலும், உதவி கேட்டு, இந்த அளவுக்கு மக்கள் கூடுவதில்லை. அவரும், இலவச மருத்துவமனை கட்டப் போகிறேன்; முதியோர் இல்லம் கட்டப் போகிறேன் என்கிறார். என்னிடம் என்னென்ன இருக்கிறதோ, அனைத்தையும் மக்களுக்கே கொடுத்துவிடுவேன் எனச் சொல்லி வருகிறார். ஆனாலும், ஒவ்வொரு பிரச்சனையாக அவரைத் துரத்தியபடியே இருக்கிறது. அவர் செய்துவரும் தர்மமே, அவரைக் காத்துவருகிறது.” என்றனர்.  


பலசாலி யாரென்று பார்ப்போம்!


நடுநிலை அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்  “ராஜேந்திரபாலாஜியை, கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிவிட முடியாது. பொது வாழ்க்கையில் எந்த அளவுக்கு நல்லவரோ, அரசியலில் அந்த அளவுக்கு வல்லவனுக்கு வல்லவர். இந்த மாவட்டத்துல ஏழு தொகுதில நாலு தொகுதி திமுகவுக்கு போனதுக்குக் காரணம் ராஜேந்திரபாலாஜியின் அனுசரித்துப்போற அரசியல்தான். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல.  மாவட்டம் முழுவதும் எனக்கே  செல்வாக்கு இருக்குன்னு கட்சி நிர்வாகிகள் சிலரை கூட்டிட்டு போயி, சென்னையில ராஜவர்மன் அடிக்கடி டேரா போடறாரு. வர்ற தேர்தல்ல ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மனோட பலம் என்னன்னு பார்த்திருவோம். 

 

KKSSR, thangam thennarasu DMK and Rajendrabalaji ADMK


அருப்புக்கோட்டை தொகுதில கே.கே.எஸ்.எஸ்.ஆரோட ராஜேந்திரபாலாஜி மோதட்டும். திருச்சுழி தொகுதில தங்கம் தென்னரசுவோட ராஜவர்மன் மோதட்டும். ராஜேந்திரபாலாஜி பிறந்தது அருப்புக்கோட்டை தொகுதியில்தான். முக்குலத்தோர் எல்லாரும் என் பக்கம்னு சொல்லிக்கிட்டிருக்காரு ராஜவர்மன். திருச்சுழி தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளே அதிகம். அதனால, ராஜேந்திரபாலாஜியும், ராஜவர்மனும் இந்த ரெண்டு தொகுதிலயும் போட்டி போடணும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா, கே.பி.முனியசாமியை பென்னாகரத்திலும், நத்தம் விஸ்வநாதனை ஆத்தூரிலும், செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சியிலும் தொகுதி மாற்றிப் போட்டியிட வைத்தாரல்லவா? அதுபோலத்தான் இதுவும்! எடப்பாடி செய்வாரா?” எனக் கேட்டனர்.  

 
ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக்கொள்வதுதானே அரசியல்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.