Skip to main content

நீங்கள் எங்கள் தலைவர் என்பதைவிட எங்களுக்கு என்ன பேறு வேண்டும்! கலைஞர் பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

kalaignar birthday - mk stalin speech twitter

 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (03-06-2020) கலைஞரின் 97-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,

"தமிழ்த்தாயின் ஆண்வடிவமே!
மூத்த தமிழினத்தின் முழு உருவமே!
எங்களின் உயிரின் உயிரே!"
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu

- என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றி ட்விட்டரில் செய்தி பகிர்ந்து காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
 

அதில் அவர் பேசியுள்ளதன் விவரம் பின்வருமாறு:
 


“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” - என்ற சொற்றொடரை காந்தக்குரலில் உச்சரித்து லட்சக்கணக்கான உடன்பிறப்புகளைச் சொக்கவைத்து அவர்தம் உள்ளங்களில் புத்துணர்ச்சியையும் ரத்தத்தில் புதுச் சூட்டையும் உற்பத்தி செய்கின்ற நம் ஆருயிர்த் தலைவர்!
 

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய இனத்தின் இன்ப மொழியாம், ஏற்றமிகு தமிழின் தனித் தத்துவ விளக்கமாகவும் வாழ்ந்த முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 97-ஆம் ஆண்டு பிறந்தநாள் - ஜூன் 3!

ஆம், அதுதான் அந்தத் தமிழ்ப் பொதிகை, அகிலம் போற்றும் திராவிடச் சூரியன், உதயமான நாள். ஜூன் 3-ஆம் நாள்!

கலைஞர் - மாபெரும் மக்கள் இயக்கத்தின் மகத்தான தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - கழகத்தின் அரை நூற்றாண்டு தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - கன்னித்தமிழ் நாட்டின் தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - மூத்த தமிழினத்தின் முத்தான தலைவர்! கலைஞர் - ஜனநாயகத்தின் காவலர்! கலைஞர் - இந்த நூற்றாண்டின் சரித்திரத் தலைவர்! இன்னும் மூன்றே ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப்போகும் தலைவர்!
 

அவரை வயதும் உடலும் அனுமதித்திருக்குமானால், அந்த தமிழ்த்தாயின் ஆண்வடிவமாக இன்று கம்பீரமாக வீற்றிருந்திருப்பார்.
 

'எங்களை வாழ்த்துங்கள்' என்று நாமனைவரும் அவர் தாள் பணிந்து வணங்கி நின்றிருப்போம். காலம் அவரை நம்மிடமிருந்து கண்காணாத தூரத்துக்கு எடுத்துச் சென்று தன்னோடு கருவூலமாக வைத்துப் பாதுகாத்துக் கொண்டுவிட்டது.
 

kalaignar birthday - mk stalin speech twitter


வங்கக் கடலோரம் கடலலையின் வாஞ்சை மிகுந்த தாலாட்டில் தனது ஆருயிர்த் தலைவராம் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் என் உயிரான தலைவரே!
 

உன்னிலிருந்து என்னை எடுத்து உருவாக்கிய உயர்வான தந்தையே!
 

உங்களின் 97-ஆவது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கவும், உங்களிடமிருந்து வாழ்த்துகளை வாங்கவும் நீங்கள் கோயில் கொண்டுள்ள கோபாலபுரம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை!
 

எனக்கு வாழ்நாள் பாடமாய் இருக்கும் உங்கள் திருவுருவப்படம் இருக்கிறது. ஆனால், உங்கள் உணர்ச்சியை இங்கே பெறுகிறேன்.
 


உங்கள் முதல் பிள்ளையின் வீடாம் முரசொலிக்கு வந்திருக்கிறேன். உங்கள் உருவமில்லை!
 

உங்களின் உருவத்தில் எழுத்துகள் இருக்கின்றன. இங்கே உங்கள் கரகர குரல் காதில் கேட்கிறது.
 

உங்களது முழுநேர மூச்சுக்காற்றாம் அண்ணா அறிவாலயம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை!
 

நீங்கள் இடும் கட்டளைக்காகக் காத்திருக்கிறது.
 

உங்கள் குரலும் குரலின் உங்கள் உணர்ச்சியும் நாள்தோறும், நாளின் நொடிதோறும் என்னை வழிநடத்துகிறது. எம்மை வாழ்வாங்கு வாழவைத்துக் கொண்டிருக்கிறது. மேடைக்குப் போனால் எல்லோரையும் வெல்லும் குரல் உங்களுடையதாகத்தான் இருக்கும். எழுதிக்காட்டினால் எல்லோருடைய எழுத்தையும் மிஞ்சி உங்கள் எழுத்து விண் உயர்ந்து நிற்கும்.
 

அரசியலில் மட்டுமா நீங்கள் ஆட்சி செய்தீர்கள்? இலக்கியத்தையும் எங்கே விட்டுவைத்தீர்கள்! இலக்கியம் மட்டுமா, திரையுலகில் உங்கள் தமிழ் ஆட்சியும் மாட்சியும் மறையாது.
 

kalaignar birthday - mk stalin speech twitter


நீங்கள் ஆட்சி செய்த முறைகள், நிறைவேற்றிய சட்டங்கள், நீங்கள் உருவாக்கிய திட்டங்கள், உங்களால் படித்தவர்கள், உங்களால் வேலை பெற்றவர்கள், உங்களால் முன்னேறியவர்கள், உங்களால் வாழ்க்கை பெற்றவர்கள், வளம் பெற்றவர்கள் எத்தனை லட்சம் பேர் தலைவரே! இவர்களை முன்னேற்றுவதுதானே உங்கள் லட்சியம் தலைவரே! தனக்காக அல்ல; இந்த தரணிக்காக வாழ்ந்த வாழ்க்கை உங்களுடையது!
 

''நமக்கு கிடைத்த பொக்கிஷம் கலைஞர்" என்றார் தந்தை பெரியார்.
 

"தமிழகத்தின் எதிர்காலம் இவர் கையில் இருக்கிறது" என்றார் மூதறிஞர் ராஜாஜி.
 

"அவரை விட்டால் யார் இருக்கிறார்கள்?" என்றார் பெருந்தலைவர் காமராஜர்.
 

"என்னுடைய நல்ல தம்பி" என்றார் பேரறிஞர் அண்ணா.
 

"திருவாரூரின் புலி இளைஞர்" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
 

"லட்சியத்துக்காகவே வாழ்பவர்" என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
 

"கலைஞர் எந்த நாற்காலியில் உட்கார்கிறாரோ, அந்த நாற்காலிக்குப் பெருமை" என்றார் பாபு ஜெகஜீவன் ராம்.
 

"பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்கு வலுசேர்த்தவர்" என்றார் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன்.
 

"ஒரு போர் வீரனுக்குரிய அறிவையும் ராஜதந்திரிக்கு உரிய அடக்கத்தையும் பெற்றவர்" என்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.
 

"புதிய புறநானூற்றைப் படைக்கும் புரவலர்" என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார்.
 

இத்தனைபேர் பாராட்ட, பார் போற்ற வாழ்ந்த நீங்கள் எங்கள் தலைவர் என்பதைவிட எங்களுக்கு என்ன பேறு வேண்டும்!
 

kalaignar birthday - mk stalin speech twitter


நீங்கள் நினைத்த காரியங்கள், மேலும் ஆற்ற நினைத்த தொண்டுகள், உங்களின் கனவுகள், உங்களின் லட்சியங்கள் அனைத்தையும் எங்கள் தோள்மேல் போட்டு பயணம் தொடர்கிறோம் தலைவரே!
 

http://onelink.to/nknapp


எல்லா திசையிலும் உங்கள் பிள்ளைகள். எங்கு நோக்கினும் உங்கள் மாணவர்கள். தமிழின மேன்மையே எங்கள் எல்லைகள். கலைஞரின் தொண்டர்கள் என்றைக்கும் சோடை போனதில்லை என்பதை நிரூபித்துக்காட்டுவோம் தலைவரே!

நூற்றாண்டை நெருங்குகிறது உங்கள் வயது. பலப்பல நூற்றாண்டுகள் பரவியிருக்கும் உங்கள் புகழ்.
 

kalaignar birthday - mk stalin speech twitter


'கலைஞர் வாழ்க’

‘கலைஞர் வாழ்க’

‘கலைஞர் வாழ்க'

- இதைச் சொல்லும்போது கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது எதுவுமில்லை!

கலைஞர் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க!

எத்திசையும் ஏத்தும் எம் கலைஞர் வாழ்க! வாழ்க!!

இவ்வாறு அவர் கலைஞர் புகழ்ப் போற்றி பேசியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்