Skip to main content

காடுவெட்டி குரு குடும்பப் பிரச்சனையின் பரபரப்பு பின்னணி... பா.ம.க.விற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த முயற்சியா?  

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

pmk


பா.ம.க.வின் முக்கிய பிரமுகரும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவருமான முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் இரண்டாவது நினைவு நாளில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் அஞ்சலி செலுத்தினார். பா.ம.க.வினர் பலரும் அவரவர் இடங்களில் அஞ்சலி செலுத்தினர். அடுத்த நாள், காடுவெட்டியில் குருவின் மகனும் மருமகனும் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வு அதிர்வை ஏற்படுத்தியது.
 


மே 26 ஆம் தேதி இரவு காடுவெட்டியில் சின்னபிள்ளை என்பவரது குடும்பத்தினருக்கும் குருவின் மகன் கனலரசன் தரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது. இதில் கனலரசனுக்கு லேசான காயம். அவரை காப்பாற்ற சென்ற குருவின் மருமகன் மனோஜ்கிரண், அவரது அண்ணன் மதன்மோகனனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ஊர்மக்கள் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் பெரிய விபரீதம் நடந்திருக்கும் என்கிறார்கள். வெட்டுப்பட்டவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் உள்ளனர். ஏன் இந்தத் திடீர் மோதல் எனக் காடுவெட்டியில் நாம் விசாரித்தோம்.
 

pmk


குருவின் சித்தப்பா மெய்யன்பன். இவரும் முன்னாள் இராணுவ வீரராக இருந்துள்ளார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சின்னபிள்ளை என்பவரது சகோதரியைத் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். வாரிசுகள் இல்லாததால், சின்னபிள்ளை குரு இருதரப்புக்கும் மெய்யன்பனின் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதோடு நிலத்திற்குச் செல்லும் பாதை சம்பந்தமாகவும் இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.
 


இதுபோக, பா.ம.க தலைமையின் தூண்டுதலில் தங்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதாக குரு மகன் கலையரசன் குற்றம்சாட்டி, பல அரசியல் தலைவர்களிடமும் முறையிட்டு வந்தார். குருவை போலவே கனலரசனும் தன் பாதுகாப்புக்குச் சில இளைஞர்களைக் கூடவைத்துள்ளார். பெரும்பாலும் தனது அத்தை சந்திரகலா ஊரான பழஞ்சநல்லூரில் தங்கியிருப்பார். சந்திரகலா மகன் மனோஜ்கிரணுக்கு தனது சகோதரி விருத்தாம்பிகையை திருமணம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று கனலரசனின் நண்பர் குறுங்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் காடுவெட்டியில் குரு வீட்டிற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது சின்னபிள்ளை என்கிற சுப்பிரமணியன், இவரது மகன் ஐயப்பன், சின்னபிள்ளையின் தம்பி காமராஜ், இவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் அருண்குமாரை வழிமறித்து அவரது பைக் சாவியைப் பிடுங்கிக்கொண்டு விரட்டியுள்ளனர். இந்தத் தகவலை அருண்குமார் கனலரசனுக்கு செல்போன் மூலம் தகவல் சொல்ல... கனலரசன் தன் அத்தை மகன்களுடன் வீட்டில் இருந்து வெளியில் வந்து சின்னபிள்ளை தரப்பினரிடம் விசாரிக்க, இருதரப்பிற்கும் பிரச்சனை ஆகியுள்ளது. திடீரென்று சின்னபிள்ளை தரப்பினர் அரிவாளால் கனலரசனை வெட்டப்போக, அதை அவரது அத்தை மகன்கள் சூழ்ந்து நின்று தடுக்கும்போது மதன்மோகனுக்குத் தலையில் வெட்டு, கனலரசனுக்கு காலில் அடி. ஊர் மக்கள் ஓடிவந்து இருதரப்பையும் தடுத்துள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் காடுவெட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். இது சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசில் இருதரப்பு புகாரிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சின்னபிள்ளை தரப்பில் சதீஷ்குமார் கனலரசன் தரப்பினரால் சண்டையின் போது காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அரியலூர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 

http://onelink.to/nknapp


இது குறித்து மீன்சுருட்டி போலீசாரிடம் கேட்டபோது, "கனலரசன் கொடுத்த புகார் மீது சின்னபிள்ளை சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் கனலரசன், மதன்மோகன், மனோஜ்கிரண், அருண்குமார் உட்பட ஐந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருண்குமாரை கைது செய்துள்ளோம். வழக்கில் சம்பந்தபட்ட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்'' என்றனர்.

சம்பவத்தன்று மறுநாள் குருவின் தயார் கல்யாணி, மீன் சுருட்டி காவல் நிலையத்துக்கு எதிரெ நின்றுகொண்டு தங்கள் குடும்பத்தை வாழவிடாமல் சதி செய்கிறார்கள் என்றும், அதேபோல் குருவின் சகோதரி செந்தாமரை, எங்கள் குடும்பத்திற்கு எதிராகப் பிரச்சனைகள் உருவாக காரணம் பா.ம.க. தலைமை தூண்டுதல் என்றும் கூறினர். இதுபற்றி பா.ம.க. முக்கிய பிரமுகர்களிடம் கேட்ட போது, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க வளர்ச்சிக்கு குரு அதிக அளவில் உழைத்துள்ளார். அவர்மீது கட்சித்தலைமையும் கட்சிகாரர்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதைக் கெடுக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்காக பா.ம.க. தலைமை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்கிறார்கள் பா.ம.க. முன்னோடிகள்.

காடுவெட்டி குரு சின்ன பிள்ளை குடும்பங்கள் ரத்தஉறவு உள்ளவர்கள். குரு இருந்தவரை அவரோடு நெருக்கமாகவே இவர்கள் அனைவரும் இருந்துள்ளனர். குரு மறைவுக்குப் பிறகு மோதல் போக்கு தலையெடுத்துள்ளது. இவர்கள் பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. பிரச்சனைகள் மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.