Skip to main content

"இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது" - கே.பி. ராமலிங்கம் 

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

k p ramalingam talks about erode by election in alliance 

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று பாஜக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  பேசுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுகவில் உள்ள இரு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது  என்பதை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் இரு தினங்களில் அறிவிப்பார். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அங்கீகாரத்தை தேடிக் கொள்வார்கள்.

 

எனவே இந்த இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதிமுகவின் இரு அணியும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு ஆகும்.  இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது. அவர்களின் கட்சி விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுகவிற்கு எதிராக மக்கள் உள்ளனர். எனவே பாஜக முன்னணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஓ. பன்னீர்செல்வம் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.  அதை நாங்கள் வரவேற்கிறோம்.

 

திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரே அணியில் இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம். திமுக கூட்டணிக் கட்சிகளை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும். இந்த தேர்தலில் பாமக போட்டியிடாதது அவர்களது தனி கருத்து. இருந்தாலும் பாமக இன்னும் தேசிய கட்சியில் எங்கள் கூட்டணியில் தான் உள்ளது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.