Skip to main content

சிபிஎம்-க்கு ஓபிசி நலன் பற்றி பேச என்ன தகுதி? கே.பாலு அறிக்கை

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
k balu pmk

 

சிபிஎம்-க்கு ஓபிசி நலன் பற்றி பேச என்ன தகுதி? என பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட ,மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தொடர்பான சர்ச்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அபத்தக்களஞ்சியமான அறிக்கைக்கு  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெளிவான விளக்கங்களுடன் கடந்த 22&ஆம் தேதி பதிலளித்திருந்தார்.

 

அந்த அறிக்கை வெளியான பின்னர், மீண்டும் அபத்தமான வினாக்களை எழுப்பியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். அவர் முன்வைத்துள்ள வாதங்கள் அனைத்தும் அபத்தமானவை என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறேன்.

 

சலோனிகுமாரி வழக்கிற்கும், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது முதலாளி கட்சிகள் தொடர்ந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்று தோழர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இப்போதைக்கு இட ஒதுக்கீடு இல்லை; இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட அது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி தான் அமையும் என்ற அடிப்படையையே அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது அபவாதங்கள் காட்டுகின்றன. உச்சநீதிமன்றத்தில்  சலோனி குமாரி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் உயர்நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கை தனியாக விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்து விட்டதாலேயே இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றாகி விடாது. 

 

சலோனிகுமாரி வழக்கு அகில இந்திய தொகுப்பில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிகளின்படி 27% இட ஒதுக்கீடு கோரும் வழக்கு. பா.ம.க. தவிர்த்த  மற்ற தமிழக கட்சிகள் தொடர்ந்த வழக்கு என்பது, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி 50% இட ஒதுக்கீடு கோரும் வழக்கு. சட்டத்திற்கு பொருந்தாத, சற்றும் சாத்தியமில்லாத ஒன்றை பாலகிருஷ்ணனின் முதலாளிகள் தரப்பு வலியுறுத்தியதால் தான், நீதிபதிகள் ஆத்திரமடைந்து ‘‘இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல’’ என்று முதலில் கூறி விட்டு, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதால், சலோனி குமாரி வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு தான் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்த உண்மையை அரசியலமைப்பு சட்டம் தெரிந்தவர்களிடம் தோழர் பாலகிருஷ்ணன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

 

அடுத்ததாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களை நிரப்பும் வேலையை மட்டும் தான் மத்திய அரசு செய்கிறது; அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது மாநில அரசுகள் தான் என்பதால் அவை மாநில அரசுகளுக்கே சொந்தம் என்றும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார், மத்திய, மாநில அரசுகள் உறவு குறித்து அ, ஆ கூட தெரியாதவர்கள் தான் இப்படி உளற முடியும். மாநில அரசால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு இடம் கூட அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படக் கூடாது; நிகழ்காலத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத அகில இந்திய தொகுப்பு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், அகில இந்திய தொகுப்பு என்பது உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசு செய்வதால் அந்த இடங்கள் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள் தான். ஆகவே, உச்ச நீதிமன்றமே நினைத்தாலும் கூட மத்திய அரசு விதிகளின்படி தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டம் அப்படித் தான் கூறுகிறது; அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது.

 

அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பட்டிலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் வழங்கினார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பாலகிருஷ்ணன், ‘‘மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை 2006 ஆம் ஆண்டே மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த அடிப்படையில்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென அபயநாத் வழக்கு தொடுத்தார். அதனால் வேறு வழியின்றி தான் அன்புமணி இட ஒதுக்கீடு அளிக்க  நேர்ந்தது; வாதத்திற்காக அன்புமணி தான் இட ஒதுக்கீடு வழங்கினார் என்றால், அதே இடஒதுக்கீட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்காதது ஏன்?’’ வினவியுள்ளார்.
 

நாடாளுமன்றத்தில் 2006&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டு சட்டம். அபய்நாத் வழக்கு பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கோரும் வழக்கு. பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் எவ்வாறு இட ஒதுக்கீடு கோர முடியும் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் விளக்குவாரா?

 

அதுமட்டுமின்றி, அபய்நாத் வழக்கு 2006&ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடரப்பட்டது. ஆனால்,  மத்திய கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் 2006 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு, 2007&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு 2008&ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. 2008&ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டத்தைக் காட்டி 2006&ஆம் ஆண்டில் அபய்நாத் எவ்வாறு வழக்கு தொடர முடியும்? முதலாளிகள் எழுதிக் கொடுத்ததை வைத்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டால் இப்படித்தான் அபத்தங்களின் தொகுப்பாக இருக்கும்; பொதுவெளியில் அசிங்கப்பட  நேரிடும்.

 

அதுமட்டுமல்ல, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, 2008&09 ஆம் ஆண்டில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 9% வீதம் மூன்று தவணைகளாக 2010&11 ஆம் ஆண்டில் தான்  முழுமையாக நிறைவேற்றப்பட்டது. 27% இட ஒதுக்கீடு பொது இடங்களுக்கு முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு தான், அதை அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.  அவ்வாறு இருக்கும் போது 2010&11 ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்த இட ஒதுக்கீட்டை  2009&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே பதவிக்காலம் முடிந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் எப்படி அகில இந்திய தொகுப்பில் நடைமுறைப்படுத்த முடியும்? இந்த உண்மை அரைவேக்காடுகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், தோழர் பாலகிருஷ்ணனுக்கு தெரியாமல் இருக்கலாமா?

 

2010&11 ஆம் ஆண்டில் பதவியில் இல்லாத  அன்புமணி இராமதாஸ் ஏன் அகில இந்திய தொகுப்புக்கு ஓ.பி.சி இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கேட்கும் பாலகிருஷ்ணன், 2009&13 காலத்தில்  சுகாதார இணை அமைச்சராக இருந்த முதலாளிக் கட்சியைச் சேர்ந்தவர் ஏன் அதே ஓ.பி.சி இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கேட்க மறுக்கிறார்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா தொழிலாளர்களின் தோழரே?

 

1998 முதல் 2009 வரை மத்திய அமைச்சரவையில் பங்கேற்றிருந்த பா.ம.க. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது? என்று பாலகிருஷ்ணன் உளறியிருக்கிறார். மத்திய அரசின்  உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி சாதனையை படைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதும் பா.ம.க. தான். இந்த உண்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத் தெரியும். 
 

இட ஒதுக்கீட்டை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுத்திருந்தால் கூட, அதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்று தோழர் பாலகிருஷ்ணன் கூறியிருகிறார். நகைப்பு தான் வருகிறது.  இடஒதுக்கீட்டுப் போராட்டங்களைப் பற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாலகிருஷ்ணனா பாடமெடுப்பது?  பாலகிருஷ்ணனும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அனுபவித்து வரும் இட ஒதுக்கீடே  மருத்துவர் அய்யா அவர்கள் முன்னெடுத்த இரத்தம் சிந்திய போராட்டங்களால் விளைந்த பயிர் என்பதை பாலகிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும். 

 

இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூகநீதிக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனைப் போராட்டங்களை நடத்தியது என்பதை பாலகிருஷ்ணன் விளக்குவாரா?

 

1. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு இடங்கள் 1986&ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 35 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த அநீதியை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டங்கள் எத்தனை?

 

2. அகில இந்திய தொகுப்பு இடங்கள் உருவாக்கப்பட்ட போது, அதில் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை. 1989&ஆம் ஆண்டில் இடதுசாரிக் கட்சிகளின் 49 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும் அங்கம் வகித்தது. அவர்கள் நினைத்திருந்தால்  வி.பி.சிங்கிடம் பேசி அப்போதே  வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, கல்வியிலும், அகில இந்திய தொகுப்பிலும் அனைத்துத் தரப்புக்கும் இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய மார்க்சிஸ்டுகளும், அவர்களின் முதலாளிகளும் தவறியது ஏன்?

 

3.  வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கூட 2000 முதல் 2004&ஆம் ஆண்டு வரை பாலகிருஷ்ணனின் முதலாளிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது அவரால் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்க முடியாது.... குறைந்தபட்சம் அவர் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காவது இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதைக் கூட செய்யவில்லையே. அதை எதிர்த்து வினா எழுப்பாமல், இப்போதும் இட ஒதுக்கீட்டு வழக்கில் குழப்பம் ஏற்படுத்தும் முதலாளிகளுக்கு பல்லக்கு தூக்குவது ஏன்? அதற்காக கிடைத்த பரிசு என்ன?

 

K.Balakrishnan

 

4. 11 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த பா.ம.க. சமூகநீதியில் பல சாதனைகளை செய்துள்ளது. ஆனால், 18 ஆண்டுகள் மத்திய அரசின் அங்கம் வகித்த பாலகிருஷ்ணனின் முதலாளி கட்சி சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சாதித்து கிழித்தது என்ன? என்பதை தொழிலாளி  பாலகிருஷ்ணன் கேட்டுச் சொல்வாரா?

 

5. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை இருப்பதைப் போல நடிக்கும் பால கிருஷ்ணனின் கட்சி தான், உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்ததுடன், தாங்கள் ஆளும் மாநிலத்திலும் செயல்படுத்தியுள்ளது. பொதுப்போட்டிப் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த 10 விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரும் பயனடைந்து வந்தனர். அவர்களுக்கு கிடைத்து வந்த  இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கு துணை போன கட்சி தான் மார்க்சிஸ்ட். அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

 

6.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த கட்சியின் அதிகாரம் பெற்ற அமைப்பு பொலிட் பீரோ எனப்படும் அரசியல் தலைமைக் குழு ஆகும். அந்த அமைப்பில் கடந்த 50 ஆண்டுகளாக தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. அரசியல் தலைமை குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு தகுதியான ஒரு தலித் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லையா? அல்லது தலித்களுக்கு அந்த அமைப்பில் பிரிதிநிதித்துவம் அளிக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு விருப்பம் இல்லையா? கட்சி அமைப்பில் தலித்களுக்கு பிரிதிநிதித்துவம் அளிப்பதற்கு கூட மனம் வராத மார்க்சிஸ்ட்கள் இட ஒதுக்கீடு பற்றியும், சமூக நீதி பற்றியும் பேசுவது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா?

 

 

உண்மையில் இப்படி ஓர் அறிக்கை வெளியிட நேர்ந்ததற்காக மிகவும் வருத்தமடைகிறேன். சமூக நீதியின் அடையாளம் பா.ம.க., சமூக நீதியின் சின்னம் பா.ம.க., சமூக நீதியின் மாற்றுச் சொல் பா.ம.க. சமூகநீதிக்காக தியாகங்களை செய்தது பா.ம.க. ஆகும். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சமூகநீதி என்பது புரியாத பாடம்... பாலகிருஷ்ணனோ அறியாத மாணவர்.  சமூகநீதி பற்றி பேச அவருக்கு தகுதியில்லை.
 

பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் பல இடஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தது பா.ம.க. ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தரும். அதற்காகத் தான் கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணனும் அவரது கட்சியும் விருந்தினராக நுழைந்தவர்கள். சமூகநீதி குறித்து அடுத்த முறை பேசுவதற்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் முகநூலில் எழுதி வரும் சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரை ஒன்றுக்கு பல முறை படிக்க வேண்டும். அதற்கான  தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் சமூகநீதி பற்றி பேச முயற்சி செய்யலாம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.