Skip to main content

அரசியல் நேர்மையும், தூய்மையும் நிறைந்த க. அன்பழகனாரின் மறைவு பேரிழப்பு! ராமதாஸ்

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

 

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் சென்னையில் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.


 

pmk



பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திமுக கற்றவர்களையும், கல்வியாளர்களையும் கொண்டிருந்தது. அவர்களில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு மிகவும் நெருங்கியவராக திகழ்ந்தவர்  பேராசிரியர் அவர்கள். சிறந்த அரசியல் தலைவராகவும், போற்றத்தக்க பேராசிரியராகவும் விளங்கிய  அவர், அரசியலில் அவரது சம காலத்தவரைப் போன்று எந்தவிதமான சமரசங்களையும் செய்து கொள்ளாமல் பயணித்தவர். அது தான் அவருக்கு தனித்துவத்தையும், மரியாதையையும் சேர்த்தது.

 

அண்ணாவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக இருந்தாரோ, அதே அளவுக்கு கலைஞரிடமும்  நெருக்கமாக இருந்தார். தம்மை விட அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர் என்றாலும், அண்ணாவிடம் தம்மால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கலைஞரின் தலைமையை ஏற்று செயல்பட்டவர். திறமையானவரின் தலைமையை ஏற்பதில் தயக்கமில்லை என்று கூறியவர். சுமார் 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான பேராசிரியர் தமது வாழ்வில் கடைசி நிமிடம் வரை எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாமல் தூய வாழ்க்கை வாழ்ந்தவர்.


 

அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களை பெற்றிருந்தார். பிற கட்சியினர் ஆனாலும்  அவர்களின் சிறப்புகளையும், திறமைகளையும் தயக்கமில்லாமல் பாராட்டியவர். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ் ஓசை நாளிதழை தொடங்கிய போது, அதன் தொடக்க விழாவிலும், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொண்டவர். தனித்தமிழ் சொற்களுடன் தமிழ் ஓசை நாளிதழை நடத்தி வருவதற்காக என்னை பாராட்டியவர். திராவிட இயக்கங்கள் செய்ய வேண்டிய,  ஆனால், செய்யத் தவறிய பணிகளை நான் செய்து வருவதாக வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

 

பேராசிரியர் க. அன்பழகன் ஓர் அப்பழுக்கற்ற, அழுக்காறாமையற்ற, அவாவற்ற தலைவர் அவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்து நலம் விசாரித்தேன். உடல் நலம் தேறி மீண்டும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரது மறைவு அரசியலுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.