Skip to main content

பழ. கருப்பையா கட்சிக் கொடி அறிமுகம்

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா தான் துவங்கிய கட்சிக்கு இன்று கொடியை அறிமுகப்படுத்தினார். 

 

முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ எனும் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். கட்சியின் பெயரை அறிவித்த பின் பழ. கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளோம். அதன் பொருட்டு நாளை மறுநாள் மாநாடு நடத்தப் போவதாகக் கூறியிருந்தார். மேலும் அது தொண்டர்களுக்கு மட்டுமான மாநாடு எனவும் பொதுமக்களை அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியிருந்தார். அதில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியிருந்தார். 

 

இந்நிலையில் இன்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் உறுப்பினர் மாநாடு நடைபெற்றது. இதில் தனது கட்சியின் கொடியை பழ. கருப்பையா அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தில் உள்ள பசுமை தமிழ்நாட்டின் வளத்தையும் அதன் சிறப்பையும் காட்டுகிறது. அதன் நடுவில் தமிழ்நாட்டின் படம். அதற்குள் காந்தி நடக்கிறார். எங்களுக்கு தமிழ், தமிழர் நலன், தமிழ்நாடு என்பது முதன்மையானது. எங்களை நெறிப்படுத்தி வழி நடத்துபவர் காந்தி. தமிழ்நாட்டு அளவிற்குத்தான் எங்களால் பாடுபட முடியும். இந்தியாவிற்கு முடியாது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டம் போட்ட பாஜக; எதிர்க்காத காங்கிரஸ் - பழ. கருப்பையா

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Pala Karuppiah interview

 

பொது சிவில் சட்டம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா பகிர்ந்து கொள்கிறார்.

 

மோடி அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்வது, ஓநாயின் பாதுகாப்பில் ஆட்டுக்குட்டி இருக்கிறது என்று சொல்வது போன்றது. உலகின் பல கோடி மக்களை ஈர்த்த நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் அசிங்கமாகப் பேசினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து ஒபாமா பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்ற நாடுகள் இவ்வாறு பேசினால் இவர்கள் அடக்கி விடுவார்கள். அமெரிக்கா பேசினால் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். 

 

இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருந்தால் எப்படி ஆள முடியும் என்று மோடி கேட்கிறார். சிவில் சட்டம் என்பது மதத்துக்கு மதம் வேறுபட்டு தான் இருக்கும். அனைவரையும் ஒன்றாக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல், அனைவரையும் பிரிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். இந்தியா என்பது ஒரு தொகுப்பு நாடு. இங்கு பல்வேறு இனங்கள், மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடைமுறையை கடைப்பிடிப்பார்கள். ஒரு மதத்தை மட்டுமே கொண்ட நாடுகளில் ஒரு சிவில் சட்டம் இருக்கும். இந்தியா போன்ற பல மதங்கள் கொண்ட நாடுகளில் அது சாத்தியமல்ல. 

 

இந்த நாட்டில் என்றும் பொது சிவில் சட்டம் வர முடியாது. பொது சிவில் சட்டம் என்றால் ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் இந்துக்களின் முறைக்கு இஸ்லாமியர்கள் மாற வேண்டுமா? அல்லது இஸ்லாமியர்களின் முறைக்கு இந்துக்கள் மாற வேண்டுமா? இவர்கள் சிறுபான்மையினரை நசுக்குகின்றனர். நம்முடைய நாட்டில் அரசாங்கத்திற்கு மதம் இல்லை என்கிற நிலையை காந்தி வழியில் வந்த காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால் இவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மதச்சாயம் பூச முயல்கின்றனர். இது ஒரு மோசமான சட்டம். ஒபாமா போன்றவர்கள் பேசினால் தான் இவர்கள் உணர்வார்கள்.

 

மோடி நிச்சயம் வீழ்த்தப்பட வேண்டும். இது ஒரு பாசிச அரசு. டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் கை வைக்கும் அவசர சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் தன்னுடைய முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எப்படி ஏற்படும்? நாளை டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இதே சட்டம் தான் தொடரும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை சரியல்ல.

 

 

Next Story

அவர் இழிவுபடுத்தாத ஆளே இல்லை; ஆளுநரை கடுமையாக விமர்சித்த பழ.கருப்பையா

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 Pala Karuppiah Interview

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துகளை நம் முன் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா எடுத்து வைக்கிறார்.

 

தமிழக ஆளுநர் மிகவும் தவறான ஒரு காரியத்தை செய்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அமைச்சர் அந்தப் பதவியில் தொடராமல் இருக்கலாம் என்று யோசனை சொல்வதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் முடிவெடுக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு பதிலாக வேறு ஒரு யோக்கியனே இல்லையா? அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தவரே இப்போதைய முதலமைச்சர் தான். 

 

வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று செந்தில் பாலாஜியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் உள்ளே நுழைந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அமலாக்கத்துறை மீது எந்தத் தவறும் இல்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெட்கமில்லாமல் செந்தில் பாலாஜியை ஆதரிக்கின்றன. நீங்கள் மோடி எதிர்ப்பு இயக்கமா அல்லது ஊழல் பாதுகாப்பு இயக்கமா? முன்யோசனை இல்லாமல் ஒரு விஷயத்தை செய்பவரை அரை லூசு என்பார்கள். அப்படியான ஒரு காரியத்தை ஆளுநர் செய்துள்ளார்.

 

தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு அமைச்சரை அவர் நீக்கம் செய்தது கேவலமான விஷயம். சனாதனம் பேசியே தமிழ்நாட்டு மக்களிடம் இந்த ஆளுநர் பாஜகவை ஒழித்துக் கட்டிவிட்டார். இதுபோல் பேசினால் பாஜக வளரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கவிழும். சவாரி செய்வதற்கு அதிமுக என்கிற குதிரை மட்டும் பாஜகவுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றுமே இல்லாதவர்களாக அவர்கள் இன்று இருந்திருப்பார்கள். 

 

தாங்கள் செய்த ஊழல் காரணமாக, பிடிக்கவில்லை என்றாலும் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. பாஜக எதற்கும் வெட்கப்படக்கூடிய கட்சி அல்ல. அது ஒரு பாசிச கட்சி. மத்தியில் ஆட்சி மாறும் வரை ரவி தான் இங்கு ஆளுநராக இருப்பார். திருவள்ளுவர் முதல் வள்ளலார் வரை இந்த ஆளுநர் இழிவுபடுத்தாத ஆளே இல்லை. இங்கு ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்கலாம் என்றுதான் பார்ப்பார்கள். கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜிக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவது சரியல்ல.