Skip to main content

அறிமுக கூட்டத்தில் அதிமுக - திமுக மோதல்; உடைக்கப்பட்ட கமிஷ்னர் அறை கண்ணாடிகள்  

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

சண்டையில கிழியாத சட்டையா? சேர்மன் பதவியேற்புன்னா உடையாத கண்ணாடியா? என கேஷுவலாக நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர்.
 

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலின் அறிமுக முதல் கூட்டம் ஒன்றிய கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். கமிஷனர் பூங்குழலி முன்னிலை வகித்தார். அறிமுக நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை திமுக எம்.பி. ராமலிங்கம், கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திமுக கவுன்சிலர்கள் 18 பேரும், அதிமுக கூட்டனியைச் சேர்ந்த 9 பேரும் கலந்து கொண்டனர்.


 

 

கவுன்சில் அறிமுக கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு  தீர்வை பெற்றுத்தந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக கமிஷனர் பூங்குழலி அறிவித்தார். அப்போது அதிமுக கவுன்சிலர் சசிகலா, தீர்மானங்களை படிக்காமல், அதுகுறித்து விவாதிக்காமல் எப்படி தன்னிச்சையாக நிறைவேற்றுகிறீர்கள் என்றார்.
 

அதோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 28ஆம் தேதி ரகசியமாக நடந்த யாகம் எதற்காக?  யாரிடம் அனுமதி வாங்கப்பட்டது? அதற்கு அனுமதி அளித்தது யார்? எந்த நோக்கத்தில் இது நடத்தப்பட்டது? என்று கமிஷனர் பூங்குழலியை கேள்விகளால் துளைத்தெடுத்தார். 


 

 

ஆனால் அதற்கான உரிய பதிலை கூறமுடியாமல் முழித்தார் ஆனையர் பூங்குழலி. அதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைக்கேட்டு வெளியில் இருந்த திமுக மற்றும் அதிமுகவினர், நிர்வாகிகள் கூட்டம் நடந்த அரங்கிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு கூடியது. அவர்களை அலுவலக ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றும் பயனில்லை. இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் கமிஷனர் அறையின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. 
 

காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனில்லை. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டும் இருந்தனர், பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவர போலிஸார் குவிக்கப்பட்டு அதிமுகவினரை வெளியேற்றினர். அதன்பிறகு திமுகவினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே அலுவலக கண்ணாடி உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளித்திருக்கிறார் கமிசனர் பூங்குழலி.
 

அதிமுக திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.