Skip to main content

“இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓயமாட்டேன்” - சசிகலா

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

“I will not rest without putting an end to this” - Sasikala

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் “ஆய்வு வரம்பின் பிற்பகுதியை பொறுத்த வரையில் வி.கே. சசிகலா, கெ.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்“தமிழகத்தில் இன்றைக்கு விவசாயிகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லை ஈரப்பதம் அதிகம் உள்ளது என்ற காரணத்தை காட்டி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் எடுக்காமல் காலம் தாமதம் செய்வதால், டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எங்கு பார்த்தாலும் சாலைகளிலேயே நெல்லை கொட்டிவைத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதைத்தான் பார்க்க முடிகிறது. அவ்வாறு சாலைகளில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகளும் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேற்கொண்டு நனைந்து கொண்டே இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு இதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் விவசாயிகளை தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை திமுகவினர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

 

இவ்வாறு மக்கள் துன்பப்படுவதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக இரண்டு நாட்களாக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தி, பார்த்துக்கொண்டது தான், இன்றைய திமுக ஆட்சியாளர்களின் பிரதான வேலையாக தெரிகிறது. இது போன்ற திமுகவினரின் சதித்திட்டங்கள் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மேலும், தமிழக மக்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா? அல்லது எப்படி வேலை செய்வது என்பது தெரியவில்லையா? என்று எண்ணத்தோன்றுகிறது. விதி வசத்தால் ஆட்சியை பிடித்தவர்களுக்கு, ஓட்டு போட்ட மங்களை எப்படி காப்பாற்றுவது என்று துளி கூட சிந்தனை இல்லை. திமுகவினருக்கு இப்போது இருக்கும் ஒரே பயம் என்னவென்றால், எதிர்க்கட்சியினர் யாரும் தங்களை எந்த கேள்வியும் கேட்டுவிடக்கூடாது, இன்றைய ஆட்சியின் அவலநிலைகளை எவ்வாறு மூடி மறைப்பது என்று மட்டும் நினைக்கிறார்கள்.

 

ஆனால் நானோ மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் எண்ணத்தில் எனது பேட்டிகள் மற்றும் அறிக்கையின் வாயிலாகவும், மக்களை நேரில் சந்திக்கும் வேளையிலும், இந்த ஆட்சியாளர்களை பார்த்து தொடர்ந்து கேள்விகளை கேட்பதால், என் மேல் வீண் பழி சுமத்தி எப்படியாவது எனது வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். திமுகவினரின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் வந்துள்ளேன். திமுக தலைமையிலான ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் நான் ஓயப்போவது இல்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.