Skip to main content

சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள், சந்தர்ப்பவாதிகள்! -அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஐ.பெரியசாமி கண்டனம்!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

ip

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோரை கண்டித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில், “முதலமைச்சர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அறிக்கை விட்டு- நான் சொல்லித்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது என ஒரு தவறான தகவலை தி.மு.க. தலைவர் மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார்” என்று, “2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டர் புகழ்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

அடிக்கடி “உரிமையாளரை” மாற்றும் “வாடகைதாரருக்கு” எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்க யோக்கியதை இல்லை. 

 

சசிகலா, டி.டி.வி. தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது முதலமைச்சர் பழனிசாமி என்று, “பச்சோந்தி” போல் உரிமையாளரை மாற்றிய உதயகுமாரே, இந்த ஆட்சியில் ஒரு வாடகைதாரர்தான்! வாடகை செலுத்தும் உரிமையாளர் பழனிசாமிக்கு, அவர் “ஜால்ரா” அடிக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து விமர்சனம் செய்ய அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

 

16.3.2020 அன்றிலிருந்து எங்கள் கழகத் தலைவர் வெளியிட்ட ஆலோசனைகளை ஒன்றிரண்டை நிறைவேற்றி- மக்கள் உயிர்காக்கும் எண்ணற்ற அரிய ஆலோசனைகளைப் புறக்கணித்த மகாபாவிகளைக் கொண்ட “ஊழல் கூடாரம்” அ.தி.மு.க. ஆட்சி.

 

அமைச்சர் திரு. உதயகுமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர். ஆனால் சொந்த மதுரை மாவட்ட மக்களை கரோனாவின் பிடியில் குலை நடுங்க வைத்து விட்டு - டெண்டரில் கமிஷன் பார்க்கும் வேலையில் சென்னையில் தீவிரமாக இருக்கிறார்.

 

எங்கள் தலைவரின், “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் பணி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் வீட்டிற்குள்ளேயே- ஏன், கஜானாவிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த போது, கரோனாப் பணிகளில் ஈடுபட்டவர், எங்கள் கழகத் தலைவர். 

 

இன்றைக்கும் கட்சி நிர்வாகிகள் முதல் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் வரை, அனைவரையும் தினமும் இப்பணிகளில் ஈடுபடுத்தி வருபவர்!

 

கரோனா காலத்தில்- மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் “ஒன்றிணைவோம் வா” என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது- அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப் படுத்தும் கொடுமையான அரசு, இங்குள்ள அ.தி.மு.க. அரசு. ஏனென்றால் அமைச்சர் திரு. உதயகுமாருக்கோ- முதலமைச்சருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை. 

 

பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை வழங்கும் அறிக்கைகளையும், மக்கள் நல உதவிகளையும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பவரே கொச்சைப் படுத்துவது என்பது, இவர் “அதுக்கு லாயக்கில்லை” என்பதைத்தான் தெரியப்படுத்துகிறது.

 

மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவரான முதலமைச்சரும், உறுப்பினரான திரு. உதயகுமாரும் படுதோல்வி அடைந்து, நிர்க்கதியாக நிற்கிறார்கள். 

 

ஜூன் 1 ஆம் தேதி, மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால் ஜூன் 30 ஆம் தேதி, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,557 பேர். 

 

3 பேராக இருந்த கரோனா மரணம், நேற்று மதுரையில் 32 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு தினங்களாக, தினமும் 200 பேர் கரோனாவால் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மதுரைக்கு மட்டும் தனி ஊரடங்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை உறுப்பினரின் மாவட்டத்தில் இதுதான் நிர்வாக லட்சணம் !

 

தமிழ்நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் 23,495 பேர்தான். ஆனால் நேற்றைய கணக்குப்படி 90,167.

 

அதே போல் தமிழக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 184, நேற்றைய கணக்குப்படி 1,201 ஆக உயர்ந்து மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

கரோனா மரணம் நோய்த் தொற்றை விட வேகமாக இரட்டிப்பு ஆகிறது என்று இன்று, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 40 சதவீதம் பேர், இரு நாட்கள் கூட  மருத்துவமனையில் உயிருடன் இருப்பதில்லை” என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் பணியில், அ.தி.மு.க. அரசின் அரைவேக்காட்டு நிர்வாகம் இதுதான்.

 

மக்கள் நலனில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவது, எங்கள் கழகத் தலைவர். ஆனால் கரோனா நோய்த் தொற்றை பரவ விட்டு- நோய்த் தொற்று - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்து- மருத்துவமனைகளில் இரு நாட்கள் கூட உயிருடன் கரோனா நோயாளிகள் இருக்க முடியாத ஒரு அபாயகரமான- அச்சமூட்டும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் திரு. உதயகுமாரும், தலைவர் முதலமைச்சர் திரு. பழனிசாமியும்தான். இந்தத் தோல்வியால் அடித்தட்டு மக்கள் வரை அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

“பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்” என்று கூறும் அமைச்சர் திரு. உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். "பாரத் நெட்" டெண்டர் திட்ட ஊழல் - எங்கள் கழகத் தலைவர் கூறியது போல், இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அ.தி.மு.க. அரசின் மானம் காற்றில் பறக்கிறது. 

 

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றது, பிறகு அவரை வேறு “டம்மி” துறைக்கு மாற்றியது, ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, உள்ளூர் கம்பெனிகள் கலந்து கொள்ள முடியாதபடி டெண்டர் விதிகளை முறைகேடாக உருவாக்கியது என்று, ஊழலில் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. உதயகுமார், மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகும், “மீசையில் மண் ஒட்டவில்லை” என்று பேசுவது, அசிங்கத்தின்- அருவருப்பின் அடையாளம். 

 

இந்நேரம், வேறு தன்மானம் உள்ள அமைச்சர் இருந்திருந்தால்- இப்போதுள்ள திரு. பழனிசாமியின் வாடகை வீட்டையாவது காலி செய்து விட்டுச் சென்றிருப்பார்.

 

“டெண்டர் விவாகரத்தில் முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றதாக” ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார். லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை விட்டு, புகாரில் முகாந்திரமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வைத்தது யார்? உடம்பெல்லாம் ஊழல்- பேசுவதெல்லாம் பொய் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. உதயகுமார் திடீரென்று அரிச்சந்திரன் வேடம் போடக்கூடாது. மதுரை மக்கள் எள்ளி நகையாடுவார்கள். 

 

ஊழல் இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மையென்றால், "பாரத் நெட்" டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வந்து என்னுடன்  விவாதிக்கும் தெம்பும், திராணியும் திரு. உதயகுமாருக்கு இருக்கிறதா? குறிப்பாக தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் செயலாளர் கையெழுத்துப் போடாத அந்தக் கோப்பை எடுத்து வரத் தயாரா?

 

இன்னொரு அமைச்சர்! அவர் பெயர் திரு. பாண்டியராஜன். பிறப்பிலேயே கட்சி தாவும் கலையுடன் அவதரித்தவர். இனி சந்திரமண்டலத்தில் புதிதாக ஒரு கட்சி துவங்கினால் அங்கும் “துண்டு” போடக் காத்திருந்து- “தன்மானத்தை" விலை பேசுபவர். அவரெல்லாம் எங்கள் கழகத் தலைவர் விடும் அறிக்கைகளைப் பற்றி பேசுவதற்குத் தகுதி இல்லை. 

 

ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியாதவர்- தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழை ஒவ்வொரு நாளும் படுகொலை செய்து கொண்டிருப்பவர், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துப் பேச யோக்கியதை இல்லை.

 

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார்” என்று, அவமானமாத்தை மறைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார். அவரிடம் நான் கேட்க விரும்புவது; உங்கள் முதலமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் கழகத் தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என் வீட்டுச் சமாச்சாரம் அடுத்த வீட்டுக்காரருக்குத் தெரிகிறது" என்று தெருவில் நின்று புலம்பினால், அதுக்கு “அர்த்தம் வேறு” என்பதை அமைச்சர் திரு. பாண்டியராஜன் உணர வேண்டும்!

 

http://onelink.to/nknapp

 

ஆகவே அமைச்சர்கள் திரு. உதயகுமாரும், திரு. பாண்டியராஜனும் “பேட்டி” என்ற பெயரில் “பிதற்ற" வேண்டாம். பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள். 

 

எங்கள் கழகத் தலைவர் அளிக்கும் பொன்னான ஆலோசனைகளைக் கேளுங்கள். “வீடு” “வீடாக” குடியேறி வந்த பழக்க தோஷத்தில் எதைப்பார்த்தாலும் சந்தேகப்படாதீர்கள்.

 

கரோனா கால மக்கள் பணியில் ஒரு பிராதன எதிர்க்கட்சி- “ஒன்றிணைவோம் வா” என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால்- இந்தியாவிலேயே அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! எங்கள் கழகத் தலைவர் மட்டும்தான்! நீங்கள் எல்லாம் சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள். சந்தர்ப்பவாதிகள். அரசியல் உலகம் வெட்கப்பட வேண்டிய பேர்வழிகள் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்