Skip to main content

“இனி கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள்..” - அதிமுகவை விளாசிய எச்.ராஜா

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

H. Raja says BJP is the reason why Edappadi Palaniswami was in charge

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில்  நேற்று (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் நிர்வாகி எச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”ஜெயலலிதா இறந்த பின்பு சிதறி கிடந்த அதிமுகவை பா.ஜ.க தான் ஒன்றிணைத்தது. அந்த வகையில் தான் அதிமுகவோடு பா.ஜ.க கூட்டணி வைத்தது. ஆனால், எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் அது எங்களுக்கு உதவவில்லை. ஏனென்றால், அதிமுகவோடு கூட்டணி வைத்த பின்பும் பாராளுமன்றத் தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ பெரிய வெற்றி வாய்ப்பு அமையவில்லை.  மிகவும் சொற்ப இடங்கள் தான் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் அவர்களை ஒட்டி வைக்கவில்லை என்றால் இன்றைக்கு அது நெல்லிக்காய் மூட்டை தான். எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்ததற்கு பா.ஜ.க கட்சி தான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். தனித் தனியாய் பிரிந்து கிடந்தவர்களை இன்று சேர்த்தவர்கள் நாங்கள் தான். அனைத்து விஷயங்களிலும் சாட்சியாக நான் கூடவே இருந்திருக்கிறேன். அதனால், அவர்கள் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டோம் என்று நினைத்து கொள்ள வேண்டாம். அதனால், காலம் அதற்கான பதிலை சொல்லும். 

 

மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருக்கிறது. அதே போன்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இங்கு அதிமுக எங்கே இருக்கிறது?. அதனால், அதிமுக இன்றோடு முடிந்தது என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக பிரிந்ததனால் பா.ஜ.க.வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதற்கு முன்பு நான் பேசிய போது கூட, அதிமுகவின் தலைமையோ அல்லது பா.ஜ.க.வின் தலைமையோ கூட்டணி முறிந்தது என்று சொல்கிற வரையில் நான் எந்தவித கருத்தும் கூற மாட்டேன் என்று தான் கூறினேன். ஆனால், இன்றைக்கு நாங்கள் என்னமோ அவர்களை எங்கள் கட்டுக்குள் வைத்தது போலும், அதற்கு இன்று வெளியே சென்று கொண்டாடி வருவது போல் செயல்படுகிறார்கள்.

 

ஜெயலலிதா மறைந்த பிறகு திமுகவை கொண்டாட முடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்திருந்த பா.ஜ.க.வை எந்த அதிமுக தலைவர்களும் மறந்துவிட வேண்டாம். பா.ஜ.க இல்லையென்றால் இன்றைக்கு இருக்கிற அதிமுக கட்சியே கிடையாது. ஆனால், இனிமேல் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் தான். நாங்கள் எதையுமே இழக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை காப்பாற்றின மோடிக்கு தமிழ்நாட்டில் எத்தனை பேர் நன்றியோடு இருக்க போகிறார்கள் என்று தான் பார்த்துவிடலாம்?. மேலும், இந்த கூட்டணி முறிவை பற்றி அவர்கள் பிறகு உணருவார்கள். இந்த கூட்டணியை விட்டு வெளியே சென்றது அவர்களின் நன்றி மறந்த செயல்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.