Skip to main content

“உப்புக்கும், உணவுப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி..”  பா.ஜ.க. அரசை சாடிய அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

“GST on Salt and Foodstuffs..”  Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக ரூ.3 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. 

 

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறை சார்பாக அறிவித்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம்மிடம் வாங்கிய ஜி.எஸ்.டி வரிப் பணத்தை கேட்டு பெறும் நிலைக்கு தமிழக அரசை மத்திய அரசு தள்ளி வருகிறது. 

 

அதுபோல் நீட் தேர்வை கொண்டு தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை அழித்த பா.ஜ.க. அரசு, இப்போது தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவ-மாணவியர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தார்கள். க்யூட் தேர்வை கொண்டு வந்தததன் மூலம் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வட இந்தியாவைச் சேர்ந்த நாகலாந்து, மணிப்பூர், ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. நீதிமன்றங்கள் இருப்பதால் தான் இந்தியாவில் இன்னும் நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் கல்வியை பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளி மாணவர்களின் நலன் காப்பதோடு அவர்கள் விரும்பும் பாடங்களும் கிடைத்து நல்லமுறையில் படித்து வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அடுத்து அடுத்து விசாரிக்கும் என கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ..க அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால் இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் லாபத்திற்காக, சுயநலத்திற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது. 

 

அ.தி.மு.க. அரசு தமிழகத்தை 10 வருடம் ஆண்டபோது 5 லட்சம் கோடி அளவிற்கு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள். தமிழகத்தில் இப்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். உதய்மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் இன்று மத்திய அரசு சொல்லும் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் கருத்துக்களை சொல்லலாம் என கூறியுள்ளார். லட்சக்கணக்கான பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பத்து வருடங்களாக தமிழகத்தில் தறிகெட்டு ஓடிய அதிமுக அரசு பேருந்து பிரேக் இல்லாத வண்டியாக செயல்பட்டு வந்தது. தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். விரைவில் தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு உயர்த்துவார்” என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.